புளிச்ச இட்லி மாவு இருந்தா.. அதை தூக்கி போடாம ஈவ்னிங் இந்த போண்டாவை செஞ்சு சாப்பிடுங்க...

Posted By:

Idli Maavu Bonda Recipe In Tamil: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது 15 நிமிடத்தில் ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் புளித்த இட்லி மாவு உள்ளதா? அதை தூக்கி போடும் எண்ணத்தில் உள்ளீர்களா?

அப்படியானால் முதலில் அந்த எண்ணத்தை தூக்கிப் போட்டு, புளித்த இட்லி மாவைக் கொண்டு போண்டாக்களை சுடுங்கள். இந்த இட்லி மாவு போண்டா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Idli Maavu Bonda How To Make a Idli Batter Bonda Recipe

உங்களுக்கு இட்லி மாவு போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இட்லி மாவு போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* புளித்த இட்லி மாவு - 1/2 கிலோ
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* ரவை - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5 (நீரில் ஊற வைத்தது)
* பூண்டு - 5 பல்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - சிறிது
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகு - 10
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் புளித்த இட்லி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் அரிசி மாவு மற்றும் ரவையை சேர்த்து, 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் ஊற வைத்த வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய், மிளகு சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஊற வைத்துள்ள இட்லி மாவுடன் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் அரைத்த வரமிளகாயை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கைகளால் பிசைந்து விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளி போண்டாக்களாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான இட்லி மாவு போண்டா தயார்.

Image Courtesy: Today's Samayal

[ of 5 - Users]
Story first published: Monday, June 24, 2024, 19:04 [IST]
Desktop Bottom Promotion