இட்லிக்கு ஒருமுறை இப்படி குருமா செய்யுங்க.. மட்டன் குழம்பே தோத்துப் போயிடும்...

Posted By:

Idli Kurma Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? இட்லி என்றாலே அதற்கு சைடு டிஷ்ஷாக மட்டன் குழம்பைத் தான் விரும்புவீர்களா? ஆனால் அந்த மட்டன் குழம்பே தோற்றுப் போகும் வகையில் ஒரு அட்டகாசமான இட்லி குருமாவை இன்று உங்கள் வீட்டில் முயற்சி செய்யுங்கள்.

இந்த இட்லி குருமா அவ்வளவு சுவையாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதவும் இந்த குருமா இட்லியுடன் மட்டுமின்றி, தோசையுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

Idli Kurma How To Make A Idly Kurma Recipe

உங்களுக்கு இட்லி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இட்லி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 4
* பூண்டு - 6 பல்
* இஞ்சி - 3 துண்டு
* சோம்பு - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 மூடி
* முந்திரி - 6 (அல்லது) பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

குருமாவிற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 5
* அன்னாசிப் பூ - 1
* கல்பாசி - சிறிது
* பிரியாணி இலை - 2
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய் மற்றும் முந்திரியை சேர்த்து நன்கு ஒருமுறை கிளறி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, கல்பாசி, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான இட்லி குருமா தயார்.

Image Courtesy: Chitra's Food Book

[ of 5 - Users]
Story first published: Wednesday, March 6, 2024, 7:09 [IST]
Desktop Bottom Promotion