கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்

Posted By:

Coimbatore Annapoorna Veg Kurma Recipe in Tamil: இட்லி, தோசை போரடித்து விட்டால் உங்கள் வீட்டில் காலை டிபனாக பூரி, சப்பாத்தி என்று செய்வீர்களா? அப்படி பூரி, சப்பாத்தி செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக எப்போதும் உருளைக்கிழங்கு மசாலாவைத் தான் செய்வீர்களா? அதுவும் அந்த உருளைக்கிழங்கு மசாலாயும் ஒரே சுவையில் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை சற்று வித்தியாசமாக கோவை அன்னபூர்ணா ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமாவை செய்யுங்கள்.

Coimbatore Annapoorna Veg Kurma Recipe How to Make at Home in Tamil

அன்னபூர்ணா ஹோட்டலில் சப்பாத்தி, பூரிக்கு பரிமாறப்படும் குருமா எப்போதும் கொஞ்சம் வித்தியாசமானது மற்றும் அனைவருக்கும் மிகவும் பிடித்த சுவையில் இருக்கும். இந்த குருமா செய்வதற்கு ஒரு தனி மசாலாவை அரைக்க வேண்டும். இந்த ஸ்டைலில் குருமா செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட அனைவரும் இன்னும் அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கும் போது சப்பாத்தி, பூரி பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். இது சப்பாத்தி, பூரி மட்டுமின்றி இட்லி, தோசைக்கும் சூப்பர் சைடிஷாக இருக்கும்.

உங்களுக்கு கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மசாலா அரைக்க:

- தேங்காய் - 1/4 கப்
- முந்திரி பருப்பு - 5
- கசகசா - 1 ஸ்பூன்
- தண்ணீர் - கால் கப்

காய்கறிகள்:

- உருளைக்கிழங்கு - 1
- பீன்ஸ் - 5
- கேரட் - 1
- பச்சை பட்டாணி - 1/4 கப்
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - தேவையான அளவு
- தண்ணீர் - 1 கப்

குருமா வைக்க:

- பிரிஞ்சி இலை - 1
- ஏலக்காய் - 2
- கிராம்பு - 3
- பட்டை - 1 இன்ச்
- பச்சை மிளகாய் - 2
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- மல்லித் தூள் - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- நெய் - 1 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 2
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- தக்காளி - 3
- தயிர் - 1/4 கப்
- பால் - 1/2 கப்
- கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
- கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி அளவு

செய்முறை:

- ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், முந்திரிப் பருப்பு, கசகசா மற்றும் கால் கப் தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

- காய்கறிகளை ஒரு குக்கரில் தேவையான அளவு தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி சூடாக்கவும். பின்னர் மசாலாப் பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து 10 நொடிகள் வதக்கவும்.

- பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

- வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் தக்காளி மற்றும் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

- அதன்பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.

- தேங்காய் விழுது நன்கு கொதித்ததும் அதில் வேக வைத்த காய்கறிகளை சேர்த்து நன்றாக கிளறவும்.

- பின்னர் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.

- மசாலா பச்சை வாசனை போனதும் தயிர் மற்றும் பால் சேர்த்து கொதிக்க விடவும்.

- நன்றாக கொதித்து குருமா வாசனை வந்ததும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்தால் சுவையான அன்னபூர்ணா ஸ்டைல் வெஜ் குருமா ரெடி!

[ of 5 - Users]
Story first published: Tuesday, June 16, 2026, 22:32 [IST]
Desktop Bottom Promotion