2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்..

Posted By:

Urulai Kizhangu Kurma Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி உருளைக்கிழங்கை சமைப்பீர்களா? அதுவும் எப்பவும் ஒரே மாதிரியான சுவையின் தான் உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிடுவீர்களா? முக்கியமாக சப்பாத்தி, பூரிக்கு பெரும்பாலும் உருளைக்கிழங்கு சைடு டிஷ் தான் செய்வீர்களா?

Potato Kurma How To Make Urulai Kizhangu Kurma Recipe

முக்கியமாக ஒரே மாதிரி மசாலாவாக தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை மசாலா செய்யாமல், உருளைக்கிழங்கு குருமாவை செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று குருமா செய்யாமல், ஒருமுறை இந்த பக்குவத்தில் குருமா செய்யுங்கள். இது சிக்கன், மட்டன் சுவையையே மிஞ்சிவிடும்.

உங்களுக்கு இந்த உருளைக்கிழங்கு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* தக்காளி - 3 (நறுக்கியது)
* முந்திரி - 7
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* கசூரி மெத்தி - 1 ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
* அரைத்த விழுது
* மிளகாய் தூள் - 1
* மல்லித் தூள் - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* பெரிய உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் தக்காளி, முந்திரி, துருவிய தேங்காயை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரில் உருளைக்கிழங்கைப் போட்டு, கிழங்கு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து, நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் கசூரி மெத்தியை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்து துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி, மூடி வைத்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான உருளைக்கிழங்கு குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, June 16, 2026, 23:20 [IST]
Desktop Bottom Promotion