கிருஷ்ண ஜெயந்தி 2024: கிருஷ்ணருக்கு பிடித்த இனிப்பு சீடை செய்ய ரெசிபி..!

Posted By:

கிருஷ்ணர் அவதரித்த ஆவணி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி அன்று கிருஷ்ணருக்கு பலவிதமான உணவுப் பண்டங்களை படைத்து வழிபடுவது வழக்கம். குறும்புக்காரரான கிருஷ்ணர் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்பார்.. கிருஷ்ணருக்கு வெண்ணை மட்டும் பிடித்தமான உணவு பொருள் இல்லை.

கிருஷ்ணருக்கு பிடித்தமான உணவுகள் பல உண்டு அவல் வைத்து செய்யும் உணவு வகைகளும், லட்டுவும், இனிப்பு மற்றும் உப்பு சீடையும் அவருக்கு மிகவும் பிடித்தமான உணவுதான். கிருஷ்ணருக்கு பிடித்த உணவுகளில் ஒன்றான இனிப்பு சீடையை எப்படி செய்யலாம் என்றும் கிருஷ்ண ஜெயந்தி 2024 எப்போது? என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

how to make a sweet seedai recipe for krishna jayanthi 2024

கிருஷ்ண ஜெயந்தி 2024 எப்போது?

இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 26ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 09.13 மணி துவங்கி, ஆகஸ்ட் 27ம் தேதி காலை 07.30 வரை அஷ்டமி திதி உள்ளது. அதே சமயம், ஆகஸ்ட் 26ம் தேதி இரவு 09.41 மணிக்கே ரோகிணி நட்சத்திரம் துவங்குகிறது. ஆகஸ்ட் 27ம் தேதி இரவு 08.54 மணி வரை ரோகிணி நட்சத்திரம். இருந்தாலும் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வரும் இரவு நேரமே கிருஷ்ணர் அவதரித்த நாளாக கருதப்படுவதால் ஆகஸ்ட் 26ம் தேதி மாலையே கிருஷ்ண ஜெயந்தி வழிபாடுகளை செய்ய வேண்டும்.

இனிப்பு சீடை செய்ய ரெசிபி

தேவையான பொருட்கள்

1. பச்சரிசி - 1 1/2 கப்

2. தேங்காய் துருவியது - 1/2 கப்

3. கருப்பு வெல்லம் - 1 கப்

4. கருப்பு மற்றும் வெள்ளை எள் - 1/2 கப்

5. எண்ணெய் - வறுக்க

6. நெய் - 2 ஸ்பூன்

செய்முறை

1. முதலில் பச்சரிசியை 2 முதல் மூன்று மணி வரை நன்கு ஊற வைத்துக்கொள்ளுங்கள். பின் தண்ணீர் வற்றி உலர வைத்து தண்ணீர் வற்றியதும் மிக்ஸியில் மைய மாவு பதத்தில் அரைக்கவும்..

2. அரைத்ததும் ஜல்லடையில் மாவை பொடித்துக் கொள்ளவும். இதனால் உதிரி மாவுகளை தவிர்க்கலாம்.

3. அடுத்ததாக வெல்லத்தை கடாயில் உருக வையுங்கள். வெல்லம் உருகுவதற்கு ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றுவது போதுமானது. கெட்டி பதத்திற்கு உருக வைக்காமல் கட்டிகளின்றி முற்றிலும் உருகிவிட்டாலே இறக்கி விடவும்.

4. அடுத்ததாக எள்ளை கடாயில் வறுத்துக் கொள்ள வேண்டும்.. பின்னர் எள்ளை மாவில் கலந்துகொள்ளவும். அடுத்ததாக உருக்கிய வெல்லத்தை ஊற்றி மாவை நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். அதோடு துருவிய தேங்காயையும் போட்டு கலக்கவும்.

5. ஒருவேலை மாவில் தண்ணீர் அதிகமாக தெரிவதுபோல் இருந்தால் வெள்ளை வேட்டியில் மாவை சுற்றி வைத்து அரைமணி நேரம் கழித்து எடுத்தால் தண்ணீர் வற்றிவிடும்.

6. சீடை இன்னும் சிறப்பாக வரவேண்டுமெனில் சீடை சுடுவதற்கு ஒரு நாள் முன் தினமே மாவை பிசைந்து வைத்து மறுநாள் சுட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.

7. பிசைந்த மாவை கோலி அளவில் உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். மாவு கையில் ஒட்டாமல் இருக்க நெய் தொட்டுக்கொள்ளவும்.

8. அடுத்ததாக எண்ணெய்யை கடாயில் ஊற்றி நன்கு காய வைக்க வேண்டும். காய்ந்ததும் உருடைகளை எண்ணெய்யில் போட்டு நன்கு வறுத்து எடுக்கவும்.

9. பொன்னிறமாக வந்துவிட்டதே என உடனே எடுக்க வேண்டாம். உள்ளுக்குள் மாவு வேகாமல் இருக்கும். எனவே நன்கு சீடையை வறுத்தெடுக்கவும்.

10. வறுக்கும்போது சில சமயம் உருண்டைகள் வெடிக்கலாம். எனவே பார்த்து பதமாக எடுக்க வேண்டும்.. இதோ கிருஷ்ணருக்கு பிடித்தமான இனிப்பு சீடை ரெடி...

[ of 5 - Users]
Story first published: Tuesday, August 20, 2024, 14:23 [IST]
Desktop Bottom Promotion