சிந்தாமணி சிக்கனும்.. பச்ச புளி ரசமும்.. - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Chinthamani Chicken And Pacha Puli Rasam Recipe In Tamil: மதியம் சிம்பிளா, அதே சமயம் வாய்க்கு ருசியா ஒரு சமையலை செய்ய வேண்டுமா? அப்படியானால் சிந்தாமணி சிக்கனையும், பச்ச புளி ரசத்தையும் செய்யுங்கள். இதில் சிந்தாமணி சிக்கன் செய்ய 15 நிமிடம் போதும்.

அதே சமயம் பச்ச புளி ரசம் செய்வதற்கு அடுப்பே தேவையில்லை. எனவே உங்களுக்கு சமைக்க பிடிக்காத சமயத்தில், சிம்பிளாகவும், அதே வேளையில் டக்கென்று முடிக்க நினைத்தால், இந்த சிந்தாமணி சிக்கனையும், பச்ச புளி ரசத்தையும் செய்யுங்கள்.

How To Make a Chinthamani Chicken And Pacha Puli Rasam Recipe

உங்களுக்கு சிந்தாமணி சிக்கனையும், பச்ச புளி ரசத்தையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிந்தாமணி சிக்கன் மற்றும் பச்ச புளி ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 10
* பூண்டு - 15 பல் (தட்டியது)
* சின்ன வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 10 (விதைகளை நீக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ (பொடியாக வெட்டியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து
* கொத்தமல்லி - சிறிது

பச்ச புளி ரசத்துக்கு...

* மிளகு - 1 ஸ்பூன்
* சீரகம் - 3/4
* பூண்டு - 4 பல்
* சின்ன வெங்காயம் - 7
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்தது)

செய்முறை:

* முதலில் சிந்தாமணி சிக்கன் செய்ய ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்கி, பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வரமிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக வெட்டி கழுவி வைத்துள்ள எலும்பில்லாத சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* சிக்கனில் இருந்து நீர் வரத் தொடங்கியதும், அதை மூடி வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். அதற்குள் ரசம் செய்து கொள்ளுங்கள்.
* அதற்கு இடிகல்லில் மிளகு, சீரகம் சேர்த்து நன்கு இடிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு இடிக்க வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் இடித்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து, அதில் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு நீரை ஊற்றி கலந்தால், சுவையான பச்ச புளி ரசம் தயார்.
* பின்னர் மற்றொரு அடுப்பில் மூடி வைத்து வெந்து கொண்டிருக்கும் சிக்கனை திறந்து, ஒருமுறை சிக்கனை கிளறி விட வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைத் தூவி நன்கு கிளறி, மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், ருசியான சிந்தாமணி சிக்கன் தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, January 8, 2026, 14:20 [IST]
Desktop Bottom Promotion