இதுவரை தக்காளி பழத்தை வெச்சு தான் சட்னி செஞ்சுருப்பீங்க.. தக்காளி காயை வெச்சும் சட்னி செய்யலாம் தெரியுமா?

Posted By:

Green Tomato Chutney Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு சுவையான மற்றும் வித்தியாசமான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் தக்காளி காய் சட்னியை செய்யுங்கள்.

பொதுவாக தக்காளி பழத்தைக் கொண்டு தான் சட்னி செய்வோம். ஆனால் இந்த சட்னியில், கனியாத பச்சை தக்காளியைக் கொண்டு சட்னி செய்ய வேண்டும். இது ஆந்திராவில் பிரபலமான சட்னி. உங்கள் வீட்டில் தக்காளி செடி இருந்தால், தக்காளி காயாக இருக்கும் போதே அதைக் கொண்டு சட்னி செய்யுங்கள்.

Green Tomato Chutney Recipe

இந்த சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். உங்களுக்கு தக்காளி காய் சட்னியை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே தக்காளி காய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தக்காளி காய் / பச்சை தக்காளி - 250 கிராம்
* பச்சை மிளகாய் - 2-3
* வரமிளகாய் - 2
* பூண்டு - 6 பல்
* சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - 1/4 கப்
* புளி - ஒரு சிறிய துண்டு (விருப்பமிருந்தால்)

தாளிப்பதற்கு...

* நெய் அல்லது எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 1 பல் (தட்டியது)
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* வரமிளகாய் - 1/2
* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் தக்காளி காயை நீரில் கழுவி அதை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்ள வேண்டும். அதன் பின் பூண்டின் தோலை நீக்கிவிட்டு தட்டிக் கொள்ளுங்கள்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதன் பின் சீரகம், வரமிளகாய் சேர்த்து 30 நொடிகள் வதக்க வேண்டும்.
* அதன் பின் பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் தக்காளி காயை சேர்த்து, சிறிது உப்பு தூவி, மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும். அதன் பின், மூடி வைத்து மிதமான தீயில் வைத்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு மூடியைத் திறந்து, புளியை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் கொத்தமல்லியை சேர்த்து கொரகொரவென்று அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி காய் சட்னி தயார்.

Image Courtesy: indianhealthyrecipes

[ of 5 - Users]
Story first published: Monday, November 20, 2023, 17:35 [IST]
Desktop Bottom Promotion