கையேந்தி பவன் கோதுமை அடையும்.. வெங்காய சட்னியும்.. எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Gothumai Adai With Onion Chutney Recipe In Tamil: காலையில் ஒரே மாதிரியான டிபனை செய்து போரடித்துவிட்டதா? சற்று சிம்பிளான, அதே சமயம் ருசியான ஒரு காலை டிபனை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கையேந்தி பவன் கோதுமை அடையையும், வெங்காய சட்னியையும் செய்து சாப்பிடுங்கள். இந்த காம்போ அட்டகாசமாக இருக்கும். ஒருமுறை இதை செய்து கொடுத்தால், வாரம் ஒருமுறை இந்த டிபனை செய்ய சொல்லிக் கேட்பார்கள். முக்கியமாக இந்த டிபனை செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு கையேந்தி பவன் கோதுமை அடையும், வெங்காய சட்னியையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கையேந்தி பவன் கோதுமை அடை மற்றும் வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Gothumai Adai How To Make a Gothumai Adai With Onion Chutney

தேவையான பொருட்கள்:

அடை தோசைக்கு...

* கோதுமை மாவு - 1 1/2 கப்
* மோர் - 1 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி - 1 இன்ச்
* பச்சை மிளகாய் - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
* ரவை - 1/4 கப்
* கொத்தமல்லி - சிறிது

வதக்குவதற்கு...

* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* முருங்கைக்கீரை - சிறிது
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

வெங்காய சட்னிக்கு...

* எண்ணெய் - 1 1/4 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* பச்சை மிளகாய் - 4
* காஷ்மீரி வரமிளகாய் - 2
* பூண்டு - 5 பெரிய பல்
* பெரிய வெங்காயம் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* கொத்தமல்லி - 1/2 கட்டு
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் கோதுமை மாவு, மோர், தேவையான அளவு தண்ணீர், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அதே ஜாரில் இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து நன்கு அரைத்து, அதையும் மாவுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் ரவையை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் முருங்கைக்கீரையை சேர்த்து, சுருண்டு வரும் வரை வதக்கி இறக்கி, துருவிய தேங்காயை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, மாவுடன் சேர்த்து, சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லியையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை அடைகளாக ஊற்றி, எண்ணெய் ஊற்றி முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்தால், கையேந்தி பவன் கோதுமை அடை தயார்.
* பின்னர் சட்னிக்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு, வெங்காயம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் புளியை சேர்த்து நன்கு வதக்கி அடுப்பை அணைத்துவிட்டு, கொத்தமல்லியைத் தூவி, வாணலியின் சூட்டிலேயே சுருண்டு வரும் வரை வதக்கி குளிர வைக்கும் வேண்டும்.
* பின்பு வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், வெங்காய சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, November 28, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion