பூரண கொழுக்கட்டை விரிசல் இல்லாம சாப்ட்டா இருக்க.. இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..

Posted By:

Ganesh Chaturthi Special Coconut Poorna Kozhukattai Recipe In Tamil: விநாயகர் சதுர்த்தி என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது முதலில் கொழுக்கட்டை தான். விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டைகளை பலவாறு செய்வார்கள். அதில் பூரண கொழுக்கட்டை மிகவும் விஷேசமானது.

பூரண கொழுக்கட்டை என்பது வேறொன்றும் இல்லை, உள்ளே ஒரு இனிப்பு கலவையை வைத்து செய்யும் கொழுக்கட்டையாகும். இந்த பூரண கொழுக்கட்டையில் சிலர் பருப்பு பூரணம் அல்லது தேங்காய் பூரணம் என்று கூட செய்வார்கள். உங்கள் வீட்டில் உள்ளோருக்கு தேங்காய் ப்ளேவர் பிடிக்குமானால், வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று தேங்காய் பூரண கொழுக்கட்டையை செய்யுங்கள்.

Ganesh Chaturthi Special Recipe How To Make a Coconut Poorna Kozhukattai

இந்த கொழுக்கட்டை செய்யும் போது நிறைய பேர் சந்திக்கும் ஒரு பிரச்சனை, அதில் விரிசல் ஏற்பட்டு பூரணம் வெளிவருவது ஆகும். நீங்களும் இப்படியான பிரச்சனையை அதிகம் எதிர்கொள்வீர்களா? அப்படியானால் மேல் மாவை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் தயார் செய்யுங்கள். இதனால் கொழுக்கட்டை விரிசல் இல்லாமலும், மென்மையாகவும் இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் பூரண கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் பூரண கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கொழுக்கட்டை மாவு - 2 கப்
* தண்ணீர் - 2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

பூரணம் செய்வதற்கு...

* பொட்டுக்கடலை - 1 கப்
* ஏலக்காய் - 3
* துருவிய தேங்காய் - 2 கப்
* வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* நெய் - 1 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் கொழுக்கட்டை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 கப் நீரை ஊற்றி, 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி, கைவிடாமல் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* நீர் நன்கு வற்றி மாவு கெட்டியாகி திரண்டு வந்தால், சிறிது மாவை எடுத்து உருட்டி பாருங்கள். அப்போது மாவு கையில் ஒட்டாமல் இருந்தால், மாவு தயார் என்று அர்த்தம். பின் அடுப்பை அணைத்துவிட்டு, மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, ஈரத் துணியால் மூடி வைத்து குளிர வைக்க வேண்டும்.
* பிறகு ஈரமில்லாத மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை மற்றும் 3 ஏலக்காயை எடுத்து நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 கப் வெல்லத்தை போட்டு, 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், துருவிய தேங்காயை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் கரைத்த வெல்ல நீரை வடிகட்டி ஊற்றி கிளறிவிட வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். கலவையானது சற்று கெட்டியானதும், அதை இறக்கி நன்கு குளிர வைக்க வேண்டும்.
* பிறகு குளிர வைத்துள்ள கொழுக்கட்டை மாவை கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின் பிசைந்த மாவை சிறிது எடுத்து உருட்டி, வாழை இலையில் எண்ணெய் தடவி, அதன் மேல் கொழுக்கட்டை மாவை வைத்து தட்டையாக தட்டி, நடுவே சிறிது தேங்காய் பூரணத்தை வைத்து, மடித்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் கொழுக்கட்டைகளாக செய்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக இட்லி தட்டில், வாழை இலையை விரித்து, அதன் மேல் செய்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை வைத்து, அந்த இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து மூடி, மிதமான தீயில் வைத்து, 5-7 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான தேங்காய் பூரண கொழுக்கட்டை தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, August 24, 2025, 18:23 [IST]
Desktop Bottom Promotion