விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிள்ளையார்பட்டி அரிசி பருப்பு மோதகம் - செய்வது எப்படி-ன்னு தெரியுமா?

Posted By:

Ganesh Chaturthi Special Pillaiyarpatti Arisi Paruppu Mothagam: விநாயகர் சதுர்த்தி வருவதால் பலரும் கொழுக்கட்டை, மோதகம் போன்றவற்றை செய்வது எப்படி என்று இணையத்தில் தேடிக் கொண்டிருப்பார்கள். நீங்களும் அப்படி தேடிக் கொண்டிருக்கிறீர்களா? கொழுக்கட்டை மற்றும் மோதகத்தை பலவாறு செய்யலாம்.

நீங்கள் பிள்ளையார்பட்டி ஸ்பெஷல் பாரம்பரிய அரிசி பருப்பு மோதகத்தை விரும்புகிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. இந்த மோதகம் குறைவான பொருட்களைக் கொண்டு செய்யக்கூடியது மற்றும் சீக்கிரம் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும்.

Ganesh Chaturthi Special Pillaiyarpatti Arisi Paruppu Mothagam

உங்களுக்கு பிள்ளையார்பட்டி அரிசி பருப்பு மோதகத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிள்ளையார்பட்டி அரிசி பருப்பு மோதகம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சரிசி - 1 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* தண்ணீர் - 3 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* வெல்லம் - 1 1/2 கப்
* துருவிய தேங்காய் - 1 கப்
* நெய் - 1 டீஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை ஒன்றாக எடுத்து, நீரில் 2-3 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய அரிசி, பருப்பில், அவை மூழ்கும் அளவில் நீரை ஊற்றி மூடி வைத்து 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 1 மணிநேரம் கழித்து, அதில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, ஒரு துணியை தரையில் விரித்து, அதில் கழுவிய அரிசி பருப்பை போட்டு பரப்பி, 20 நிமிடம் உலர வைக்க வேண்டும்.
* சரியான பதம் என்றால், இதில் கையை வைத்தால், அரிசியும், பருப்பும் கையில் ஒட்ட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரிசி மற்றும் பருப்பை சேர்த்து ஈரப்பதம் போய் நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் வறுத்த அரிசி பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு, ரவை பதத்திற்கு சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இந்த பொடியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு அடைத்து வைத்துக் கொண்டால், தேவையான போது எடுத்து டக்கென்று மோதகம் செய்யலாம்.
* அடுத்து மோதகம் செய்வதற்கு ஒரு வாணலியில் 3 கப் நீரை ஊற்றி, உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து, நீர் லேசாக சூடானதுமே அரைத்து வைத்துள்ள அரிசி பருப்பு பொடியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து 5-7 நிமிடம் தொடர்ந்து கிளறினால், மாவானது பூப்போன்று வெந்துவிடும்.
* அதன் பின் அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு வெல்லம் கரையும் வரை கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காய், நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு அல்வா பதத்திற்கு ஒட்டாமல் வரும் வரை கிளறி விட்டு இறக்கி வைக்க வேண்டும்.
* கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், மோதகம் அச்சை எடுத்து, அதனுள் நெய் தடவி, மாவை வைத்து மோதகம் செய்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் அச்சில் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டில் நெய் தடவி, செய்து வைத்துள்ள மோதகங்களை வைத்து மூடி, 15 நிமிடம் வேக வைத்து எடுத்தால், பிள்ளையார்பட்டி அரிசி பருப்பு மோதகம் தயார்.

Image Courtesy: Today's Samayal

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 3, 2024, 18:23 [IST]
Desktop Bottom Promotion