2 கப் கடலை மாவு இருந்தா.. 1 கிலோ ஓமப்பொடியை 15 நிமிடத்தில் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..

Posted By:

Diwali Special Omapodi Recipe In Tamil: தீபாவளிக்கு உங்கள் வீட்டில் சிம்பிளான பலகாரம் செய்ய நினைக்கிறீர்களா? இதுவரை நீங்கள் உங்கள் வீட்டில் தீபாவளி பலகாரம் எதுவும் செய்ததில்லையா? இந்த ஆண்டு தீபாவளி பலகாரம் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் முதலில் ஓமப்பொடியை செய்யுங்கள். ஏனெனில் பலகாரங்களிலேயே செய்வதற்கு மிகவும் ஈஸியானது தான் ஓமப்பொடி.

முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதுவும் 2 கப் கடலை மாவு இருந்தால், 1 கிலோ வரை ஓமப்பொடியை செய்யலாம். ஒருமுறை ஓமப்பொடி செய்து பழகிவிட்டால், பின் அடிக்கடி உங்கள் வீட்டில் இந்த ஓமப்பொடியை செய்வீர்கள்.

Diwali Special Recipes How To Make a Omapodi

உங்களுக்கு ஓமப்பொடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஓமப்பொடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கடலை மாவு - 2 கப்
* அரிசி மாவு - 50 கிராம்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* ஓமம் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஓமத்தை சுடுநீரில் போட்டு, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 கப் கடலை மாவு மற்றும் 50 கிராம் அரிசி மாவை எடுத்து, அவற்றை சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்த ஓம நீரை வடிகட்டி சேர்த்து, பின் சூடான எண்ணெயை 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி கிளறி விட வேண்டும்.
* பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், முறுக்கு உழக்கை எடுத்து, அதில் சிறு சிறு துளைகளைக் கொண்ட அச்சை வைத்து, அதனுள் சிறிது எண்ணெய் தடவி, பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் வைத்து மூடி, எண்ணெயில் நேரடியாக பிழிந்துவிட்டு, 2-3 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் பிழிந்து பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான ஓமப்பொடி தயார்.
* இறுதியாக அந்த எண்ணெயில் கறிவேப்பிலையை சேர்த்து பொரித்து, ஓமப்பொடியுடன் சேர்த்துக் கொண்டால், இன்னும் அற்புதமாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Saturday, October 18, 2025, 21:07 [IST]
Desktop Bottom Promotion