தீபாவளிக்கு இந்த பக்குவத்துல மட்டன் குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம் என எல்லாத்துக்கும் அள்ளும்..

Posted By:

Diwali Kari Kuzhambu Recipe In Tamil: தீபாவளி என்றாலே புதிய ஆடை, பட்டாசு, பலகாரங்கள் மட்டுமின்றி, அந்நாளில் காலையில் எண்ணெய் குளியல் எடுத்த பின் சாப்பிடும் இட்லி கறிக்குழம்பு தான் நினைவிற்கு வரும். உங்கள் வீட்டிலும் இப்படி தான் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவீர்களா?

அதுவும் எப்போதும் மட்டன் குழம்பை ஒரே சுவையில் தான் செய்வீர்களா? அப்படியானால் இந்த ஆண்டு தீபாவளிக்கு மட்டன் குழம்பை இந்த பக்குவத்தில் செய்யுங்கள். இது இட்லி, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

Diwali Kari Kuzhambu How To Make a Diwali Mutton Kuzhambu Recipe

உங்களுக்கு இந்த தீபாவளி கறிக்குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தீபாவளி கறிக்குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 1
* அன்னாசிப்பூ - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மட்டன் - 1 கிலோ
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 20
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* முந்திரி - 4-5
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் மட்டனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி, ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயத்தை நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு கிளறி விட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, நீர்விட்டு வரும் வரை வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கொத்தமல்லி, முந்திரி மற்றும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் வெந்து கொண்டிருக்கும் மட்டனுடன் மிளகாய் தூள் மற்றும் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பில் இருந்து எண்ணெய் பிரியத் தொடங்கியதும், குக்கரை மூடி, 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான மட்டன் குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, October 19, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion