சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்... தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா

Posted By:

Dhaba Style Paneer Masala: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா?

அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு தாபா ஸ்டைல் பன்னீர் மசாலாவை செய்யுங்கள். இந்த பன்னீர் மசாலா நன்கு க்ரீமியாகவும் சுவையாகவும் இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

Dhaba Style Paneer Masala Recipe In Tamil

முக்கியமாக இந்த பன்னீர் மசாலா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். உங்களுக்கு தாபா ஸ்டைல் பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு..

* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கடலை மாவு - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு..

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* கடலை மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 6 (அரைத்தது)
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* பால் - 1/4 கப்
* க்ரீம் - 1/4 கப்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் பன்னீர் துண்டுகளைப் போட்டு, அதில் 'ஊற வைப்பதற்கு' கொடுத்துள்ள உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள் மற்றும் கடலை மாவு சேர்த்து நன்கு கிளறி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து 3-4 நிமிடம் பொன்னிறமாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே பேனை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின் அதில் சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் கசூரி மெத்தி சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* பின் அதில் கடலை மாவை சேர்த்து கிளறி, அரைத்த தக்காளியை சேர்த்து, 1/2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கிளறி, 10-12 நிமிடம் நன்கு கிளற வேண்டும்.
* மசாலாவானது கெட்டியானதும், 1/4 கப் பால் மற்றும் 1/4 கப் க்ரீம் சேர்த்து கிளறி, 1 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக பன்னீர் துண்டுகளை சேர்த்து, வேண்டுமனால் சிறிது சுடுநீரை ஊற்றி கிளறி, உப்பு வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி ஒரு கொதி வந்ததும், கொத்தமல்லியைத் தூவி, 1 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா தயார்.

Image Courtesy: kannammacooks

[ of 5 - Users]
Story first published: Tuesday, August 1, 2023, 14:30 [IST]
Desktop Bottom Promotion