தாபா ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா

சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சை பட்டாணி உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு தாபா ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலாவை செய்யுங்கள்.

Posted By:

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சை பட்டாணி உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு தாபா ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலாவை செய்யுங்கள். இந்த பச்சை பட்டாணி மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, புலாவுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இதை செய்வது மிகவும் சுலபம். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

Dhaba Style Green Peas Masala Recipe In Tamil

உங்களுக்கு தாபா ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா ரெசிபியை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தாபா ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சை பட்டாணி - 1 கப்

* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 4 (வேக வைத்து அரைத்தது)

* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா - 1 டீஸ்பூன்

* கசூரி மெத்தி - சிறிது

* உப்பு - சுவைக்கேற்ப

வதக்கி அரைப்பதற்கு...

* பெரிய வெங்காயம் - 2

* முந்திரி - 10

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

அரைப்பதற்கு...

* இஞ்சி - 1 இன்ச்

* பூண்டு - 4 பல்

* பச்சை மிளகாய் - 3

தாளிப்பதற்கு...

* பட்டை - 1 துண்டு

* கிராம்பு - 2

* ஏலக்காய் - 2

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் வாணலியை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தக்காளியைப் போட்டு, வேக வைத்து இறக்கி குளிர வைத்து மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி வதக்கி, அத்துடன் முந்திரியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

* பின்பு அதில் பச்சை பட்டாணியை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து கிளறி, மூடி வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* பின் மூடியைத் திறந்து, கரம் மசாலா மற்றும் வெங்காய பேஸ்ட்டை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியாக கசூரி மெத்தியை கையால் நசுக்கி மேலே தூவி இறக்கினால், சுவையான தாபா ஸ்டைல் பட்டாணி மசாலா தயார்.

Image Courtesy: sharmispassions

[ of 5 - Users]
Story first published: Thursday, February 16, 2023, 17:19 [IST]
Desktop Bottom Promotion