தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Coconut Dosa With Coconut Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியான தோசை சுட்டு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோர் தோசை பிரியர்களா? தினமும் தோசை சாப்பிட கேட்பார்களா? அப்படியானால் ஒருமுறை தேங்காய் தோசை சுட்டு கொடுங்கள்.

இந்த தேங்காய் தோசை பஞ்சு போன்று இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். அதுவும் இந்த தோசைக்கு தேங்காய் சட்னியை சைடு டிஷ்ஷாக செய்தால், இன்னும் பிரமாதமாக இருக்கும். ஒருமுறை இந்த காம்பினேஷனில் காலை டிபனை செய்யுங்கள், நிச்சயம் பாராட்டைப் பெறுவீர்கள்.

Coconut Dosa With Coconut Chutney How To Make Thengai Dosa With Thengai Chutney

உங்களுக்கு தேங்காய் தோசையும், தேங்காய் சட்னியையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் தோசை மற்றும் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

தோசை மாவிற்கு...

* பச்சரிசி - 2 டம்ளர்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* அவல் - 1 டம்ளர்
* துருவிய தேங்காய் - 1 டம்ளர்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப

சட்னிக்கு...

* துருவிய தேங்காய் - 1 கப்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை எடுத்து, அத்துடன் வெந்தயத்தை சேர்த்து, நீரில் 2-3 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி குறைந்தது 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு அவலை நீரில் ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அரிசி ஊறிய பின், மிக்சர் ஜாரில் அல்லது கிரைண்டரில் ஊற வைத்த அரிசியை சேர்த்து, அத்துடன் கழுவி வைத்துள்ள அவலை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து, நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, மூடி வைத்து, 8 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
* 8 மணிநேரம் கழித்து, மாவில் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை கல் தோசை போன்று ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைத்து, தோசையை திருப்பி போடாமல் எடுத்தால், பஞ்சு போன்ற தேங்காய் தோசை தயார்.
* அடுத்து தேங்காய் சட்னிக்கு, மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, புளி, பச்சை மிளகாய், சுவைக்கேற்ப உப்பு, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்க்க வேண்டும்.
* இறுதியாக சட்னியை தாளிக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், தேங்காய் சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, March 13, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion