1 சௌ சௌ காயும், 5 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..

Posted By:

Chow Chow Thakkali Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் செய்யும் இட்லி, தோசை டிபனுக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? உங்கள் வீட்டில் உள்ளோர் காய்கறிகளை சாப்பிட மறுப்பார்களா? அப்படிப்பட்டவர்களை காய்கறிகளை சாப்பிட வைக்க வேண்டுமானால், அந்த காய்கறிகள் இருப்பது தெரியாத அளவில் சமைத்து கொடுங்கள்.

Chow Chow Thakkali Chutney How To Make Chow Chow Tomato Chutney

அதுவும் உங்கள் வீட்டில் யாரும் சௌ சௌ காயை சாப்பிடமாட்டார்களா? அந்த காயை சாப்பிட வைக்க, அதைக் கொண்டு சட்னி செய்யுங்கள். இப்படி சௌ சௌ கொண்டு சட்னி செய்யும் போது, அது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும். மேலும் இந்த சட்னி செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். ஒருமுறை செய்தால், அடிக்கடி செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள்.

உங்களுக்கு இந்த சௌ சௌ தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சௌ சௌ தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* சௌ சௌ - 1 (நறுக்கியது)
* தக்காளி - 5 (நறுக்கியது)
* பூண்டு - 3 பல்
* பச்சை மிளகாய் - 4
* சின்ன வெங்காயம் - 15
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 டம்ளர்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மல்லி - 1/2 டீஸ்பூன் (இடித்தது)
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் சௌ சௌ காயின் தோலை நீக்கிவிட்டு, அதை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் நறுக்கிய சௌ சௌ, தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், சாம்பார் தூள், 1/2 டம்ளர் தண்ணீர், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் உள்ள நீரை தனியாக ஒரு கிண்ணத்தில் வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மத்து கொண்டு காய்கறிகளை நன்கு மசித்து கடைந்து விட வேண்டும்.
* அடுத்து வடித்து வைத்துள்ள நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு மீண்டும் அந்த குக்கரை அடுப்பில் வைத்து, கடையலை 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அதே சமயம் மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், இடித்த வரமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, கொதித்து கொண்டிருக்கும் கடையலுடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான சௌசௌ தக்காளி சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, July 10, 2026, 6:42 [IST]
Desktop Bottom Promotion