சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்... சௌ சௌ கிரேவி

Posted By:

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தியா? அந்த சப்பாத்திக்கு ஒரு அற்புதமான சுவையைக் கொண்ட கிரேவி செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் சௌ சௌ உள்ளதா? அப்படியானால் அந்த சௌ சௌ கொண்டு ஒரு அட்டகாசமான கிரேவியை செய்யுங்கள்.

இந்த சௌ சௌ கிரேவி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, மிகவும் ருசியாகவும் இருக்கும். அதுவும் தற்போது வெயில் காலம் என்பதால், நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகம் உண்பது நல்லது. சௌ சௌ காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இதை அடிக்கடி உணவில் சேர்க்க, உடல் நீரேற்றத்துடன் இருக்கும்.

Chow Chow Gravy Recipe In Tamil

முக்கியமாக சௌ சௌ குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். மேலும் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வோர் விரைவில் செய்யும் வகையில் இந்த கிரேவி ஈஸியான செய்முறை கொண்டிருக்கும். இந்த சௌ சௌ கிரேவியானது சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு சௌ சௌ கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சௌ சௌ கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சௌ சௌ - 2 (சிறியது மற்றும் தோல் நீக்கி துண்டுகளாக்கப்பட்டது)
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* நீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

வறுத்து அரைப்பதற்கு...

* மல்லி - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 2
* வரமிளகாய் - 2
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய தக்காளி - 1

செய்முறை:

* முதலில் சௌ சௌ காயை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி விதைகள், வரமிளகாய், சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, தேங்காய் மற்றும் தக்காளியைப போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சௌ சௌ துண்டுகளை சேர்த்து கிளறி, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவை பார்த்து, குக்கரை மூடி குறைவான தீயில் வைத்து 1 விசில் விட்டு இறக்கினால், சுவையான சௌ சௌ கிரேவி தயார்.

Image Courtesy: chitrasfoodbook

[ of 5 - Users]
Story first published: Monday, April 24, 2023, 18:10 [IST]
Desktop Bottom Promotion