பூரிக்கு ஒரு டைம் சிக்கனை இப்படி குருமா செஞ்சு பாருங்க.. சுவை அள்ளும்.. வீடும் மணக்கும்...

Posted By:

Chicken White Kurma Recipe In Tamil: விடுமுறை நாட்களில் உங்கள் வீட்டில் காலையில் இட்லி, பூரி என்று செய்து அதற்கு அசைவ சைடுடிஷ்களை செய்து சாப்பிட்டு, விடுமுறையை கொண்டாடுவீர்களா? இன்று உங்கள் வீட்டில் பூரி செய்யப் போகிறீர்களா?

அந்த பூரிக்கு வீடே மணக்கும் அளவில் ஒரு சிம்பிளான சிக்கன் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சிக்கன் வெள்ளை குருமாவை செய்யுங்கள். இந்த சிக்கன் வெள்ளை குருமா பூரியுடன் மட்டுமின்றி, இட்லியுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

Chicken Vellai Kurma How To Make a Chicken White Kurma Recipe

உங்களுக்கு சிக்கன் வெள்ளை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் வெள்ளை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 2 கப்
* கசகசா - 1 டீஸ்பூன் (சுடுநீரில் ஊற வைத்துக் கொள்ளவும்)
* முந்திரி - 15 (சுடுநீரில் ஊற வைத்துக் கொள்ளவும்)
* பச்சை மிளகாய் - 10

குருமாவிற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 2 துண்டு
* ஏலக்காய் - 3
* அன்னாசிப்பூ - 3
* கல்பாசி - சிறிது
* கிராம்பு - 4
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* சிக்கன் - 1 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* தயிர் - 100 மிலி
* தண்ணீர் - குருமாவிற்கு தேவையான அளவு
* எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் கசகசா மற்றும் முந்திரியை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், கசகசா மற்றும் முந்திரியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு சிக்கனை நீரில் நன்கு 3-4 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து நன்கு சூடானதும், சோம்பு, பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, கல்பாசி, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, புதினா, கொத்தமல்லியை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறிய பின் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி 2 நிமிடம் நீர்விட்டு வரும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் தயிரை நன்கு அடித்துவிட்டு சேர்த்து கிளறி, 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்தால், சுவையான மற்றும் மணமான சிக்கன் வெள்ளை குருமா தயார்.

Image Courtesy: Get Curried

[ of 5 - Users]
Story first published: Sunday, June 16, 2024, 9:10 [IST]
Desktop Bottom Promotion