செட்டிநாடு காலிஃப்ளவர் சூப்

உங்களுக்கு தினமும் ஒரே மாதிரியான சூப் குடிச்சு அலுத்துப்போச்சா? வித்தியாசமான சுவையுடைய சூப் சுவைக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு காலிப்ளவர் சூப் செய்து குடியுங்கள்.

Posted By:

நீங்கள் டயட்டில் இருக்கீங்களா? அடிக்கடி சூப் குடிப்பீங்களா? உங்களுக்கு தினமும் ஒரே மாதிரியான சூப் குடிச்சு அலுத்துப்போச்சா? வித்தியாசமான சுவையுடைய சூப் சுவைக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு காலிப்ளவர் சூப் செய்து குடியுங்கள். இந்த சூப்பை அப்படியே குடிக்கலாம் அல்லது சாதத்தில் ஊற்றி பிசைந்தும் சாப்பிடலாம். உங்களுக்கு செட்டிநாடு காலிஃப்ளவர் சூப் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

Chettinadu Cauliflower Soup Recipe In Tamil

கீழே செட்டிநாடு காலிஃப்ளவர் சூப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* காபிஃப்ளவர் - 1 1/4 கப்

* பாசிப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் - 1 (நறுக்கியது)

* தக்காளி - 1 (நறுக்கியது)

* பூண்டு - 3 பல்

* பச்சை மிளகாய் - 4-5 (நீளமாக கீறியது)

* இஞ்சி - 1/2 இன்ச்

* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

* கறிவேப்பிலை - சிறிது

* கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்

* எலுமிச்சை சாறு - 1-2 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

* பட்டை - 1 இன்ச்

* கிராம்பு - 4

* அன்னாசிப்பூ - 1

* பிரியாணி இலை - 1

* சோம்பு - 1/4 டீஸ்பூன்

* சீரகம் - 1/4 டீஸ்பூன்

* கல்பாசி - 1

செய்முறை:

* முதலில் பாசிப்பருப்பை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு, போதுமான அளவு நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது காலிஃப்ளவரைப் போட்டு, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். காலிஃப்ளவர் முக்கால்வாசி வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, நீரை வடிகட்டி தனியாக காலிஃப்ளவரை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* அதன் பின் இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, வேக வைத்துள்ள பாசிப்பருப்பை மசித்து சேர்த்து, அத்துடன் 1 1/2-2 கப் நீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின்பு வேக வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து, 3-4 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து, இறுதியாக கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து அடுப்பை அணைத்தால், சுவையான செட்டிநாடு காலிஃப்ளவர் சூப் தயார்.

Image Courtesy: naliniscooking

[ of 5 - Users]
Desktop Bottom Promotion