1/2 கப் கடலைப்பருப்பும், பச்சரிசியும் இருந்தா இந்த செட்டிநாடு தவளை வடை செய்யுங்க..மொறுமொறுனு சூப்பரா இருக்கும்

Posted By:

Chettinad Thavalai Vada Recipe in Tamil: தென்னிந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு தின்பண்டம் என்றால் அது வடைதான். நாம் தேநீர் கடையை கடக்கும் போதெல்லாம் நமது கண்கள் நிச்சயம் வடையைத் தேடும். அந்த அளவிற்கு வடை நம் வாழ்க்கையுடன் பின்னி பிணைந்ததாகும். பொதுவாக வடை என்றால் அது பருப்பு வடை அல்லது உளுந்து வடைதான் நமக்கு தெரியும். ஆனால் இவற்றைத் தவிர பல வடைகள் உள்ளது.

ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் சில சிறப்பு உணவுகள் இருக்கும். அதிலும் செட்டிநாடு உணவுகள் என்றால் உலகளவில் புகழ்பெற்றவை. செட்டிநாடு பகுதிகளில் தவளை வடை மிகவும் பிரபலமானது. இந்த தவளை வடை 4 பருப்புகளை வைத்து செய்யப்படுவதால் சுவையானதாக இருப்பதுடன் மிகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

Chettinad Thavalai Vada Recipe How to Make Chettinad Thavalai Vada

உங்களுக்கு செட்டிநாடு தவளை வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தவளை வடையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- கடலைப்பருப்பு - 1/2 கப்
- துவரம்பருப்பு - 1/4 கப்
- பாசிப்பருப்பு - 1/4 கப்
- உளுத்தம் பருப்பு - 1/4 கப்
- பச்சரிசி - 2 டீஸ்பூன்
- வர மிளகாய் - 5
- இஞ்சி - ஒரு சிறிய துண்டு
- பூண்டு - 3 பல்
- சோம்பு - 1 ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
- துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

- கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பச்சரிசி ஆகியவற்றை ஒன்றாகக் கழுவி, 1-2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். அதிக நேரம் ஊறவைத்தால் வடை எண்ணெய் குடிக்க வாய்ப்புள்ளது.

- ஊறவைத்த பருப்பை வடிகட்டி, தண்ணீரை முழுவதுமாக வடிய விடவும். மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் சோம்பு சேர்த்து ஒரு சுற்று கோரகொரப்பாக அரைக்கவும்.

- பிறகு வடிகட்டிய பருப்பு கலவையை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்கவும். தேவைப்பட்டால், மிக்ஸியை நிறுத்தி, ஸ்பூனால் கிளறி விட்டு மீண்டும் அரைக்கலாம். மாவு நன்கு கெட்டியாக இருக்க வேண்டும்.

- அரைத்த மாவை ஒரு கிண்ணத்தில் மாற்றி அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய தேங்காய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் சூடாக்கவும். பின்னர் தயாரித்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறிய உருண்டை எடுத்து, உள்ளங்கையில் வைத்து நன்கு அகலமாகத் தட்டவும்.

- தட்டிய வடையை மெதுவாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும். ஒரே நேரத்தில் அதிக வடை போட வேண்டாம். வடை பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் மாறும் வரை இருபுறமும் திருப்பிப் போட்டு பொரிக்கவும்.

- வறுத்த வடையை ஒரு டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெயை வடிய விட்டால் சுவையான செட்டிநாடு தவளை வடை ரெடி!

[ of 5 - Users]
Story first published: Thursday, October 9, 2025, 15:46 [IST]
Desktop Bottom Promotion