சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க..

Posted By:

Chettinad Style Mutton Uppukari Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் மட்டன் எடுக்கப் போகிறீர்களா? அந்த மட்டனை எப்பவும் குழம்பு, சுக்கா என்று தான் செய்வீர்களா? அப்படியானால் இந்த வாரம் ஒரு செட்டிநாடு ரெசிபியை ட்ரை செய்யுங்கள். அது தான் மட்டன் உப்புக்கறி. இந்த உப்புக்கறியின் ஸ்பெஷலே அதில் சேர்க்கும் சின்ன வெங்காயமும், வரமிளகாயும் தான். இந்த செட்டிநாடு மட்டன் உப்புக்கறியை ஒருமுறை செய்து சுவைத்தால், பின் மட்டன் வாங்கும் போதெல்லாம் இந்த ரெசிபியை ட்ரை செய்வீர்கள். அந்த அளவில் இதன் சுவை பிரமாதமாக இருக்கும்.

Chettinad Style Mutton Uppukari How To Make This Chettinad Recipe

உங்களுக்கு செட்டிநாடு மட்டன் உப்புக்கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு மட்டன் உப்புக்கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* மட்டன் - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 டம்ளர்

மிளகு மசாலாவிற்கு...

* மல்லி - 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு..

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 12 (விதைகளை நீக்கியது)
* கறிவேப்பிலை - 3 கொத்து
* சின்ன வெங்காயம் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* வேக வைத்த மட்டன்
* அரைத்த மிளகு மசாலா
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் குக்கரில் மட்டனை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து, குக்கரை அடுப்பில் வைத்து, மட்டனில் இருந்த நீர் வெளிவரும் வரை 3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* மட்டனில் இருந்து நீர் வெளிவந்ததும், அதில் 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 6-7 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, மிளகு, சீரகம் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் விதைகளை நீக்கிய வரமிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து, 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, வெங்காயம் நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்த மட்டனை நீருடன் அப்படி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மிளகு மசாலாவை சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து, மட்டனில் உள்ள நீர் வற்றும் வரை வதக்கி விட்டு, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, August 2, 2026, 7:35 [IST]
Desktop Bottom Promotion