தீபாவளிக்கு நாட்டுக்கோழி வாங்குனா இந்த செட்டிநாடு நாட்டுக்கோழி பிரட்டல் செய்யுங்க... அசத்தலா இருக்கும்...!

Posted By:

Chettinad Nattukozhi Pirattal Recipe in Tamil: மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்த தீபாவளி பண்டிகை வந்துவிட்டது. தீபாவளி என்றாலே புத்தாடையும், கறிக்குழம்பும்தான். தீபாவளி அன்று தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு புத்தாடை உடுத்தி கறிக்குழம்பை ஒரு பிடி பிடித்தால்தான் தீபாவளி முழுமையடையும். புரட்டாசி மாதம் முடிந்து விட்டதால் அனைத்து வீடுகளிலும் இப்போது அசைவ உணவை செய்ய ரெடியாக இருப்பார்கள்.

தீபாவளி நாளில் சிலர் மட்டன் வாங்குவார்கள், சிலர் நாட்டுக்கோழி வாங்குவார்கள். அப்படி நீங்கள் நாட்டுக்கோழி வாங்கினால் அதை வழக்கம் போல சமைக்காமல் இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் நாட்டுக்கோழி பிரட்டல் செய்து பாருங்கள். இந்த நாட்டுக்கோழி பிரட்டல் உங்களின் தீபாவளி கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக்கும். இந்த பதிவில் செட்டிநாடு ஸ்பெஷல் நாட்டுக்கோழி பிரட்டலை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Chettinad Nattukozhi Pirattal Recipe How to Make Chettinad Nattukozhi Pirattal
தேவையானப் பொருட்கள்:

- நாட்டுக்கோழி - 1 கிலோ
- பெரிய வெங்காயம் - 2

அரைக்க:

- சின்ன வெங்காயம் - 10
- பூண்டு - 15 பல்
- கிராம்பு - 3

வறுத்து பொடியாக அரைக்க:

- சோம்பு - 2 ஸ்பூன்
- சீரகம் - 3 ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்

தாளிக்க:

- எண்ணெய் - தேவையான அளவு
- சோம்பு - அரை ஸ்பூன்
- பட்டை - 2
- கிராம்பு - 4
- கல்பாசி - சிறிதளவு
- அன்னாசி பூ - 2

பொடி வகைகள்:

- மிளகாய் பொடி - 3 ஸ்பூன்
- சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

செய்முறை:

- நாட்டுக்கோழியை கழுவி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

- கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றி பின் அதில் சோம்பு போட்டு வறுத்து அதன் பின் சீரகம், மிளகு போட்டு கருக விடாமல் வறுக்கவும்.பின் அதை ஆற விட்டு மிக்சியில் உலர அரைத்து வைத்துக்கொள்ளவும்.

- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து பின் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கிக் கொள்ளவும்.

- அதன் பின்பு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், பூண்டு ,கிராம்பு கலவையை போட்டு வதக்கவும்.

- பின்னர் வறுத்து பொடியாக வைத்துள்ள சீரகம்,சோம்பு,மிளகு கலவையையும்
போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

- அதன் பிறகு நாட்டுக்கோழியைப் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

- அதன் பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சாம்பார் தூளை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

- நாட்டுக்கோழி முக்கால் பதம் வெந்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

- சிக்கன் வெந்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விட்டு கெட்டி பதத்திற்கு வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கினால் செட்டிநாடு நாட்டுக்கோழி பிரட்டல் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Sunday, October 19, 2025, 19:50 [IST]
Desktop Bottom Promotion