சிக்கனை இந்த மாதிரி குக்கரில் காரைக்குடி ஸ்டைலில் குருமா வையுங்க... எல்லா டிபனுக்கும் சூப்பரா இருக்கும்...!

Posted By:

Chettinad Chicken Kulambu Recipe in Tamil: நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை வருவதே அசைவ உணவை ஆசைதீர ருசித்து சாப்பிடத்தான். பெரும்பாலான வீடுகளில் சண்டே காலையிலேயே சிக்கன் அல்லது மட்டன்தான். இதில் சுவையிலும், விலையிலும் மட்டனை விட சிக்கனே பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது. அதேசமயம் சமைப்பதிலும் மட்டனை விட சிக்கன் மிகவும் எளிமையானது.

செட்டிநாடு உணவுகள் என்றாலே சுவையானவைதான், அதிலும் செட்டிநாட்டு அசைவ உணவுகள் என்றால் எப்பவுமே ஸ்பெஷல்தான். அதனால்தான் அனைத்து ஊர்களிலும் செட்டிநாடு உணவகங்கள் திறக்கப்படுகிறது. செட்டிநாடு உணவகங்களில் சிக்கன் பல்வேறு விதங்களில் சுவையாக சமைக்கப்படுகிறது.

Chettinad Chicken Kulambu Recipe How to Make Chettinad Chicken Kulambu

சிக்கனை குக்கரில் வைத்து காரைக்குடி ஸ்டைலில் சூப்பரான குருமா செய்யலாம். இந்த சிக்கன் செய்வதற்கு எளிதானது மற்றும் மிகவும் சுவையானதும் கூட. இந்த சிக்கன் குருமா இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் புரோட்டாவுக்கு மட்டுமின்றி சாதத்துடன் சாப்பிடவும் மிகவும் அருமையாக இருக்கும். இந்த பதிவில் சூப்பரான காரைக்குடி சிக்கனை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு காரைக்குடி சிக்கன் குருமாவை குக்கரில் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரைக்குடி சிக்கன் குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- சிக்கன் - அரை கிலோ
- தக்காளி - 1
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி தழை - சிறிதளவு

வறுத்து அரைக்க:

- வர மிளகாய் - 2
- கொத்தமல்லி விதை - 4 டேபிள் ஸ்பூன்
- சோம்பு - 1 ஸ்பூன்
- பட்டை - 1 இன்ச் அளவு
- கிராம்பு - 3
- இஞ்சி - 1 இன்ச் அளவு
- பூண்டு - 4 பல்
- துருவிய தேங்காய் - 4 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 10

தாளிக்க:

- நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
- பட்டை - சிறிய துண்டு
- கிராம்பு - 1
- பெரிய வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

- முதலில் சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவிக் கொள்ளவும்.

- தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.

- அடுப்பில் கடாயை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வர மிளகாய், மல்லி விதை, சோம்பு, பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.

- கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

- வறுத்த பொருட்கள் ஆறியதும் மிக்ஸ்சியில் நைஸான பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

- அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும்.

- பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து தக்காளி குலையும் வரை வதக்கவும்.

- தக்காளி வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.

- பின்னர் கழுவி வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும். சிக்கன் பாதி வெந்ததும் 300 மில்லி தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி குக்கரை மூடி விடவும்.

- நீராவி வந்ததும் விசில் போட்டு மூடி வைக்கவும். 4 விசில் வந்ததும் அடுப்பை ஆப் பண்ணி விடவும்.

- நீராவி அடங்கியதும் மூடியை திறந்து குழம்பை பாத்திரத்திற்கு மாற்றி விடவும். கொத்தமல்லி தழையை சேர்த்து கலக்கினால் காரசாரமான காரைக்குடி சிக்கன் குழம்பு ரெடி!

[ of 5 - Users]
Story first published: Saturday, November 29, 2025, 20:31 [IST]
Desktop Bottom Promotion