இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த மாதிரி வடகறி செஞ்சு பாருங்க.. சும்மா டேஸ்ட் அள்ளும்...

Posted By:

Chennai Special Vada Curry Recipe In Tamil: இட்லி, தோசைக்கு எப்போதும் சாம்பார், சட்னி செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சற்று வித்தியாசமாகவும், அவர்களை அசத்தும் வகையிலும் ஒரு சைடு டிஷ் செய்து கொடுக்க நினைத்தால், சென்னை ஸ்பெஷல் வடகறியை செய்யுங்கள்.

இந்த வடகறி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சப்பாத்தி, பூரியுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இந்த மாதிரி செய்தால் 20 நிமிடத்தில் செய்துவிடலாம். அந்த அளவில் இது மிகவும் ஈஸியாக இருக்கும்.

Chennai Special Vada Curry How To Make a Chennai Special Vada Curry Recipe

உங்களுக்கு சென்னை ஸ்பெஷல் வடகறி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சென்னை ஸ்பெஷல் வடகறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கடலைப் பருப்பு - 200 கிராம்
* வரமிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு

கிரேவிக்கு...

* எண்ணெய் - 4 டீஸ்பூன்
* பட்டை - 2
* கிராம்பு - 2
* பிரியாணி இலை - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை மிளகாய் - 4 (துண்டுகளாக்கப்பட்டது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தல்லி - 1 கைப்பிடி
* தண்ணீர் - 4 கப்

செய்முறை:

* முதலில் கடலைப் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் கடலைப் பருப்பைக் கழுவிப் போட்டு, அத்துடன் வரமிளகாய், சிறிது உப்பு சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் 2 டீஸ்பூன் ஊற்றி, அரைத்து வைத்துள்ளதை அடை போன்று தட்டி, அப்படியே கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடை குளிர்ந்ததும், அதை உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கய வெங்காயம், சுவைக்கேற்ப உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து, அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள், சோம்பு தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் புதினா மற்றும் கொத்தமல்லியைத் தூவி 1 நிமிடம் கிளறி, 4 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் உதிர்த்து வைத்துள்ளதை சேர்த்து கிளறி, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் சிறிது கொத்தமல்லியைத் தூவினால், சுவையான சென்னை ஸ்டைல் வடகறி தயார்.

Image Courtesy: SIMPLY SAMAYAL

[ of 5 - Users]
Story first published: Monday, August 5, 2024, 7:00 [IST]
Desktop Bottom Promotion