பூரி, சப்பாத்திக்கு ஏற்ற காலிஃப்ளவர் பட்டாணி குருமா - எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Cauliflower Pattani Kurma Recipe in Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? பொதுவாக சப்பாத்தி என்றால் உருளைக்கிழங்கு குருமாவைத் தான் செய்வீர்களா?

உங்கள் வீட்டில் காலிஃப்ளவரும், பச்சை பட்டாணியும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் குருமாவை செய்யுங்கள். இந்த காலிஃப்ளவர் பட்டாணி குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். இந்த குருமாவை செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

Cauliflower Pattani Kurma How To Make a Cauliflower Peas Kurma

உங்களுக்கு காலிஃப்ளவர் பட்டாணி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் பட்டாணி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 1
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 1
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1
* தக்காளி - 2 ( பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* காலிஃப்ளவர் - 250 கிராம்
* பச்சை பட்டாணி - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

அரைப்பதற்கு...

* தேங்காய் - 1 கைப்பிடி
* புதினா - சிறிது
* பச்சை மிளகாய் - 2
* கசகசா - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் காலிஃப்ளவரை உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்த சுடுநீரில் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் காலிஃப்ளவர் மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் காய்கறி மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், புதினா, பச்சை மிளகாய், கசகசா, சோம்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, கரம் மசாலாவை சேர்த்து கலந்து, மூடி வைத்து 3 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான காலிஃப்ளவர் பட்டாணி குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, January 27, 2026, 19:00 [IST]
Desktop Bottom Promotion