1/2 கப் தேங்காயும், 1 கப் கேரட்டும் இருந்தா இந்த குருமாவை வையுங்க... தோசைக்கு மட்டன் குருமா மாறியே இருக்கும்!

Posted By:

Carrot Masala Kurma Recipe in Tamil: இரவு வேளையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் தோசை அல்லது சப்பாத்தி தான் டின்னராக இருக்குமா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து அலுத்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் அசைவ குருமாவை மறக்கடிக்கும் வகையில் ஒரு சூப்பரான சைவ குருமாவை செய்ய நினைக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் ஒரு கப் கேரட்டும், கொஞ்சம் தேங்காயும், தக்காளியும் இருந்தால், அட்டகாசமான சுவையில் குருமா செய்யலாம். இந்த குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த கேரட் குருமா சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட.

Carrot Masala Kurma Recipe How to Make Carrot Masala Kurma

உங்களுக்கு சூப்பரான கேரட் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- நறுக்கிய கேரட்- அரை கிலோ
- நறுக்கிய தக்காளி - 2
- தேங்காய் துருவல் - அரை கப்
- பச்சை மிளகாய் - 6
- இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- கசகசா - 1 டீஸ்பூன்
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 3
- ஏலக்காய் - 2
- கிராம்பு - 2
- பட்டை - 1
- மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

செய்முறை :

- முதலில் கேரட்டை நன்றாக கழுவி விட்டு மூழ்கும் அளவு தண்ணீரில் போட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

- பின்னர் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், கசகசா போட்டு மென்மையான பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளிக்கவும்.

- பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை தாளிக்க வேண்டும்.

- இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனதும் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.

-பின்னர் மஞ்சள் தூள் மற்றும் வேக வைத்துள்ள கேரட்டை சேர்த்து வதக்க வேண்டும்.

- பின்னர் அரைத்து வைத்திருக்கும் தேங்காய், கசகசா கலவை ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.

- குழம்பானது சற்று கெட்டியானதும், கொத்தமல்லி தூவி இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான கேரட் குருமா ரெடி!

- இந்த கேரட் குருமா தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Monday, October 27, 2025, 16:54 [IST]
Desktop Bottom Promotion