கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..

Posted By:

Carrot Dosa With Coconut Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஆரோக்கியமான ஒரு டிபனை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகள் கேரட் என்றால் சாப்பிடமாட்டார்களா? அவர்களை கேரட் சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் அந்த கேரட்டைக் கொண்டு தோசை சுட்டு கொடுங்கள். இந்த கேரட் தோசைக்கு சைடு டிஷ்ஷாக தேங்காய் சட்னி செய்யுங்கள். இந்த டிபன் காம்போ பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த டிபன் காம்போ செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

Carrot Dosa With Coconut Chutney How To Make This Delicious Breakfast Recipe

உங்களுக்கு இந்த கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் தோசை மற்றும் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

கேரட் தோசைக்கு..

* கேரட் - 200 கிராம் (நறுக்கியது)
* வரமிளகாய் - 2
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* இட்லி மாவு - தேவையான அளவு
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* ரவை - 2 டேபிள் ஸ்பூன்

தேங்காய் சட்னிக்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4
* இஞ்சி - சிறிய துண்டு
* பெரிய வெங்காயம் - 1
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* தேங்காய் - 1 கப்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு..

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் கேரட், வரமிளகாய், பூண்டு, இஞ்சி, சீரகம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொண்டு, அத்துடன் அரைத்த கேரட் விழுதை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் ரவையை சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி நன்கு கலந்து, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதற்குள் சட்னி செய்து கொள்ளலாம். அந்த சட்னிக்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பின் அதில் புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து ஒருமுறை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் தேங்காய், பொட்டுக்கடலை, புளி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், தேங்காய் சட்னி தயார்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், கேரட் தோசை தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, September 11, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion