சப்பாத்திக்கு ஒருமுறை இந்த கிரேவியை செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 சப்பாத்தி அதிகமா சாப்பிடுவாங்க..

Posted By:

Capsicum Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் பெரும்பாலும் இரவு நேரத்தில் சப்பாத்தியை தான் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான குருமா மற்றும் கிரேவியை தான் செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையுடைய கிரேவியை செய்ய நினைக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் குடைமிளகாய் உள்ளதா? அப்படியானால் அந்த குடைமிளகாயைக் கொண்டு கிரேவி செய்யுங்கள். இந்த குடைமிளகாய் கிரேவி சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

Capsicum Gravy: How To Make a Capsicum Gravy Recipe

உங்களுக்கு குடைமிளகாய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய குடைமிளகாய் - 1 (சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* பெரிய வெங்காயம் - 1 (சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 2
* பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* கடலை மாவு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கசூரி மெத்தி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் அதை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியில் உள்ள மீதமுள்ள எண்ணெயில் சீரகம், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி வதங்குவதற்குள், மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை மாவை சேர்த்து பச்சை வாசனை போக வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, தயிர் மற்றும் வறுத்த கடலை மாவை சேர்த்து நன்கு கிளறி, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கட்டிகளின்றி கிளறி 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் வதக்கிய குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து கிளறி, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, மேலே கசூரி மெத்தியை கசக்கி தூவி கிளறி இறக்கினால், சுவையான குடைமிளகாய் கிரேவி தயார்.

Image Courtesy: spiceindiaonline

[ of 5 - Users]
Story first published: Thursday, February 29, 2024, 21:17 [IST]
Desktop Bottom Promotion