ஆந்திரா ஸ்பெஷல் மாங்காய் பாசிப்பருப்பு சட்னி

Posted By:

தற்போது கோடைக்காலம் என்பதால் மார்கெட்டில் மாங்காய் விலைக் குறைவில் கிடைக்கும். நீங்கள் மாங்காய் பிரியர் என்றால், அந்த மாங்காயைக் கொண்டு ஒரு ஆந்திரா ரெசிபியை செய்யுங்கள். அது தான் மாங்காய் பாசிப்பருப்பு சட்னி. இந்த சட்னி ஆந்திராவில் பிரபலமானது.

இந்த சட்னியை வெள்ளை சாதத்துடன், நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் மிகவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த மாங்காய் பாசிப்பருப்பு சட்னி செய்வது மிகவும் சுலபம். தினமும் சாம்பார், புளிக்குழம்பு செய்து போரடித்தால், சற்று வித்தியாசமாக இந்த சட்னியை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுங்கள்.

Andhra Special Raw Mango Moong Dal Chutney In Tamil

இது சற்று புளிப்பும், இனிப்பும் கலந்து இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். உங்களுக்கு ஆந்திரா ஸ்பெஷல் மாங்காய் பாசிப்பருப்பு சட்னியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே ஆந்திரா ஸ்பெஷல் மாங்காய் பாசிப்பருப்பு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மாங்காய் - 3/4 கப் (தோல் நீக்கி, துண்டுகளாக்கப்பட்டது)
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* வரமிளகாய் - 4
* சீரகம் - 3/4 டீஸ்பூன்
* வெல்லம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை சேர்த்து குறைவான தீயில் வைத்து, பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சீரகத்தை சேர்த்து குறைவான தீயில் வைத்து 3 நிமிடம் வறுக்க வேண்டும். அதன் பின் வரமிளகாயை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து, அவற்றை பாசிப்பருப்புடன் சேர்த்து குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பாசிப்பருப்பு, வரமிளகாய், சீரகம் சேர்த்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் மாங்காய் துண்டுகளை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் வெல்லத்தை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து சில நொடிகள் வறுத்து இறக்கி, சட்னியில் ஊற்றினால், சுவையான ஆந்திரா ஸ்பெஷல் மாங்காய் பாசிப்பருப்பு சட்னி தயார்.

குறிப்பு:

* இந்த சட்னிக்கு அதிக புளிப்பைக் கொண்ட மாங்காயை பயன்படுத்தாதீர்கள். லேசான புளிப்பைக் கொண்ட மாங்காயை பயன்படுத்துங்கள்.
* இந்த சட்னியை மிகவும் மென்மையாக அரைக்க வேண்டாம். சற்று கொர கொரவென்றே அரைத்துக் கொள்ளுங்கள்.

Image Courtesy: sailusfood

[ of 5 - Users]
Story first published: Friday, May 26, 2023, 18:45 [IST]
Desktop Bottom Promotion