சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா சிக்கன் ஊறுகாய்

Posted By:

நீங்கள் இதுவரை எத்தனையோ சிக்கன் ரெசிபிக்களை செய்திருப்பீர்கள். அதேப் போல் எத்தனையோ வகையான ஊறுகாயை சுவைத்திருப்பீர்கள். ஆனால் சிக்கன் ஊறுகாய் செய்து சாப்பிட்டதுண்டா? இல்லையென்றால் இன்று அந்த ஊறுகாயை செய்து பாருங்கள். அதுவும் இந்த ஆந்திரா சிக்கன் ஊறுகாய் சாதம், சப்பாத்தி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியூர்களில் வேலை செய்பவராயின், உங்கள் அம்மாவிடம் இந்த ஊறுகாயை செய்து கொடுக்கச் சொல்லி சாப்பிடுங்கள். உங்களுக்கு ஆந்திரா சிக்கன் ஊறுகாய் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா சிக்கன் ஊறுகாய் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Andhra Chicken Pickle Recipe In Tamil

தேவையான பொருட்கள்:

* சிக்கன் - 1 கிலோ (சிறு துண்டுகளாக வெட்டப்பட்டது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* எலுமிச்சை - 3 (சாறு எடுத்துக் கொள்ளவும் மற்றும் அதை 3 நிமிடம் சூடேற்றி இறக்கி குளிர வைக்க வேண்டும்.)
* உப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

வறுத்து பொடி செய்வதற்கு...

* மல்லி விதைகள் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1 1/2 டீஸ்பூன்
* கிராம்பு - 6
* பட்டை - 2 இன்ச்
* ஏலக்காய் - 1
* அன்னாசிப்பூ - 1

தாளிப்பதற்கு...

* வெந்தயம் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 3-4
* பூண்டு - 15 பல்
* எண்ணெய் - 3/4 கப்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து பொடி செய்வதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, உயர் தீயில் வைத்து நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் தீயைக் குறைத்து மிதமான தீயில் வைத்து, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு 25 நிமிடம் வேக வைக்க வேண்டும். அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறி விடவும் வேண்டும். ஊறுகாய் செய்வதிலேயே இந்த ஸ்டெப் தான் மிகவும் முக்கியமானது.
* பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3/4 கப் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், கறிவேப்பிலை, வரமிளகாய், தட்டி வைத்துள்ள பூண்டு சேர்த்து 1 நிமிடம் தாளிக்க வேண்டும்.
* பின் அதில் மற்றொரு வாணலியில் உள்ள சிக்கனை கிரேவியுடன் அப்படியே கொட்டி நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பொடியை தூவி மிதமான தீயில் வைத்து 15-18 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறி இறக்கி குளிர வைத்து, பின் காற்றுப்புகாத ஒரு பாட்டிலில் போட்டு சேகரித்தால், சுவையான ஆந்திரா சிக்கன் ஊறுகாய் தயார்.

குறிப்பு:

* இந்த ஊறுகாய் செய்யும் போது, எலுமிச்சை சாற்றினை சூடேற்றி குளிர வைத்து பின் பயன்படுத்த வேண்டும். இதை மட்டும் மறக்காதீர்கள்.
* மசாலா பொருட்களை வறுக்கும் போது குறைவான தீயில் வைத்து வறுக்க வேண்டும்.
* கிராம்பு, பட்டை, அன்னாசிப்பூ மற்றும் ஏலக்காயை ஒன்றாக வறுக்கலாம்.

[ of 5 - Users]
Story first published: Sunday, April 23, 2023, 11:00 [IST]
Desktop Bottom Promotion