மழை நேரத்துல இந்த ஆந்திரா சிக்கன் கிரேவி செய்யுங்க.. பூரி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் டக்கரா இருக்கும்...

Posted By:

Andhra Style Chicken Gravy Recipe In Tamil: தற்போது டிட்வா புயல் காரணமாக கனமழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து கொண்டிருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் நன்கு காரசாரமாக சமைத்து சாப்பிட்டால் இதமாக இருக்கும். அதுவும் விடுமுறை நாளில் மழை நேரத்தில் நீங்கள் சிக்கன் வாங்கி சமைக்கப் போகிறீர்களா?

அப்படியானால் அந்த சிக்கனைக் கொண்டு வழக்கமாக செய்வது போன்று சிக்கன் கிரேவியை செய்யாமல், ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவியை செய்யுங்கள். இப்படி செய்யும் சிக்கன் கிரேவி பூரி, சப்பாத்தி, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

Andhra Chicken Gravy How To Make a Andhra Style Chicken Gravy Recipe

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* சிக்கன் - 750 கிராம்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை - 1
* தயிர் - 1/2 கப்

வறுத்து அரைப்பதற்கு...

* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* ஏலக்காய் - 3
* கிராம்பு - 5
* பட்டை - 2 துண்டு
* மிளகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்

கிரேவி தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - 1/2 கப்

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த சிக்கனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 எலுமிச்சையின் சாறு மற்றும் தயிர் சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து, 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய், கிராம்பு, பட்டை, மிளகு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் மல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து, 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து, 10 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும். சிக்கன் வெந்ததும், கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, November 30, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion