சப்பாத்தி, பூரிக்கு பன்னீரை வைச்சு இந்த பஞ்சாபி ஸ்டைல் சைடிஷை பண்ணுங்க... ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும்...!

Posted By:

Aloo Paneer Recipe in Tamil: இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்வதற்கு திட்டமிட்டுள்ளீர்களா? சப்பாத்தி, பூரிக்கு வழக்கமான உருளைக்கிழங்கு குருமா செஞ்சு போரடிச்சிருச்சா? ஏதாவது சுவையான புது சைடிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பன்னீர்னா பிடிக்குமா? அப்ப அந்த பன்னீரையும், உருளைக்கிழங்கையும் வைச்சு ஒரு சூப்பரான சைடிஷை செய்யுங்க.

இந்த பஞ்சாபி ஸ்டைல் ஆலூ பன்னீர் கிரேவி சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி நெய் சோறு, புலாவ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். இந்த ஆலூ பன்னீர் சப்ஜி செய்வதற்கு எளிதாக இருப்பதுடன் ஹோட்டலில் சாப்பிடுவது போல மிகவும் சுவையாகவும் இருக்கும். இதை ஒருமுறை செய்து விட்டால் இனி ஹோட்டலுக்கு போனால் பன்னீர் ஆர்டர் செய்யவே மாட்டிர்கள்.

Aloo Paneer Recipe How to Make Alu Paneer Recipe

உங்களுக்கு பஞ்சாபி ஆலூ பன்னீர் சப்ஜியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆலூ பன்னீர் சப்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுக்க:

- 4 ஸ்பூன் எண்ணெய்
- 3 உருளைக்கிழங்கு, நறுக்கிய
- 1 கப் நறுக்கிய பன்னீர்

கிரேவி செய்ய:

- 1 டேபிள் ஸ்பூன் பட்டர்
- 1 பிரியாணி இலை
- 3 ஏலக்காய்
- 1 இன்ச் இலவங்கப்பட்டை
- 4 கிராம்பு
- 1 டீஸ்பூன் கசூரி மேத்தி
- 1 பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கியது
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்
- ½ டீஸ்பூன் சீரகத் தூள்
- ஒன்றரை கப் அரைத்த தக்காளி
- 3 டேபிள்ஸ்பூன் முந்திரி விழுது
- 1 கப் தண்ணீர்
- 1 டீஸ்பூன் உப்பு
- 2 டேபிள் ஸ்பூன் கிரீம்
- 2 டேபிள் ஸ்பூன் துருவிய பனீர்
- ¼ டீஸ்பூன் கரம் மசாலா
- 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி

செய்முறை:

- முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய பன்னீர் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து, 1 பிரியாணி இலை, 3 ஏலக்காய், 1 இன்ச் இலவங்கப்பட்டை, 4 கிராம்பு மற்றும் 1 டீஸ்பூன் கசூரி மேத்தி சேர்த்து வதக்கவும். மசாலாப் பொருட்கள் நறுமணம் வரும் வரை வறுக்கவும்.

- பின்னர் நறுக்கிய வெங்காயம், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- அதன்பின் ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் கொத்தமல்லி தூள் மற்றும் ½ டீஸ்பூன் சீரகத் தூள் சேர்த்து வதக்கவும்.

- பின்னர் ஒன்றரை கப் அரைத்த தக்காளியைச் சேர்த்து, எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை வதக்கவும்.

- அதன்பின் 3 டேபிள்ஸ்பூன் முந்திரி விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

- 1 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

- நன்றாக கொதித்தவுடன் வறுத்த உருளைக்கிழங்கு மற்றும் பனீர் சேர்க்கவும்.

- மூடி வைத்து, 2 நிமிடங்கள் அனைத்து மசாலாக்களும் பன்னீரில் சேரும் வரை கொதிக்க விடவும்.

- பின்னர் 2 டேபிள்ஸ்பூன் கிரீம், 2 டேபிள்ஸ்பூன் துருவிய பனீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

- அடுப்பை மிதமான தீயில் வைத்து ¼ டீஸ்பூன் கரம் மசாலா மற்றும் 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி சேர்க்கவும் 2 நிமிடங்களுக்கு பின் அடுப்பை அணைக்கவும்.

- அவ்வளவுதான் சூப்பரான பஞ்சாபி ஆலூ பன்னீர் சப்ஜி ரெடி. இதை சூடான சப்பாத்தி அல்லது பூரியுடன் சேர்த்து ரசித்து சாப்பிடவும்.

[ of 5 - Users]
Story first published: Friday, January 23, 2026, 16:21 [IST]
Desktop Bottom Promotion