ஆடி வெள்ளி ஸ்பெஷல் ஆடி பால் பாயாசம் - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Aadi Velli Special Aadi Paal Payasam Recipe In Tamil: ஆடி வெள்ளிக்கிழமை நாளில் சிலர் தங்கள் வீடுகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்து வழிபாடு செய்வார்கள். அப்போது அம்மனுக்கு பிரசாதமாக படைப்பதற்கு பாயாசம், வடை, சுண்டல் என்று செய்வார்கள். உங்கள் வீட்டில் ஆடி வெள்ளி நாளில் மாலை வேளையில் அம்மனுக்கு ருசியான ஒரு பாயாசம் செய்ய நினைத்தால், ஆடி பால் செய்து படையுங்கள்.

இந்த ஆடி பால், ஆடி மாதங்களில் அம்மனுக்கு செய்து படைக்கும் ஒரு பிரசாதமாகும். இந்த ஆடி பால் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. இதில் தேங்காய் பால் அதிகம் சேர்ப்பதால், வயிற்றுப் புண் இருந்தால் அது குணமாகும், செரிமான பிரச்சனைகள் நீங்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

Aadi Velli Special Recipe How To Make a Aadi Paal Payasam

உங்களுக்கு ஆடி பால் பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆடி பால் பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* துருவிய தேங்காய் - 1 கப்
* ஏலக்காய் - 6
* தண்ணீர் - 1/2 கப் + 3/4 கப் + 1/4 கப் + 1/2 கப்
* பாசிப்பருப்பு - 2 டீஸ்பூன்
* முந்திரி - 10 + 10
* வெல்லம் - 1/2 கப்
* நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காயை போட்டு, அத்துடன் 6 ஏலக்காய் சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, முதல் தேங்காய் பாலை வடிகட்டி எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதே தேங்காயை மீண்டும் ஜாரில் போட்டு, 3/4 கப் நீரை ஊற்றி அரைத்து, பின் அதை வடிகட்டி இரண்டாம் தேங்காய் பாலை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 10 முந்திரியைப் போட்டு, 1/4 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாகக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 1/2 கப் பொடித்த வெல்லத்தை சேர்த்து, அதில் 1/2 கப் நீரை ஊற்றி, வெல்லத்தை கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* வெல்லம் கரைந்ததும், பாயாசம் செய்யும் பாத்திரத்தில் அந்த வெல்லத்தை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பு முந்திரி கலவையை கிளறி கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் எடுத்து வைத்துள்ள இரண்டாம் தேங்காய் பாலை ஊற்றி கிளறி, 1 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* கொதி வந்ததும், அதில் முதல் தேங்காய் பாலை ஊற்றி அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து ப்ரை செய்து, இறக்கி வைத்துள்ள பாயாசத்துடன் சேர்த்தால், சுவையான ஆடி பால் பாயாசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, July 25, 2025, 14:31 [IST]
Desktop Bottom Promotion