ருசியான... ஆடி கும்மாயம்

கும்மாயம் என்பது ஒரு பாரம்பரிய செட்டிநாடு இனிப்பு. இது மிகவும் ஆரோக்கியமான ஒரு ஸ்வீட். இதை பெரும்பாலும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் மற்றும் ஆடிப் பெருக்கு அன்றும் செய்வார்கள்.

Posted By:

கும்மாயம் என்பது ஒரு பாரம்பரிய செட்டிநாடு இனிப்பு. இது மிகவும் ஆரோக்கியமான ஒரு ஸ்வீட். இதை பெரும்பாலும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் செய்வதுண்டு. மேலும் ஆடிப் பெருக்கு அன்றும் இதை பலர் செய்வதுண்டு. அதோடு இந்த இனிப்பை பெண்கள் பருவமடையும் போதும் செய்து கொடுப்பார்கள். ஏனெனில் இதில் புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

Aadi Kummayam Recipe In Tamil

இந்த ஆண்டு ஆடிப் பெருக்கு நாளில் கும்மாயம் செய்ய விரும்புகிறீர்களா? கீழே ஆடி கும்மாயம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

கும்மாயம் மாவுக்கு...

* உளுத்தம் பருப்பு - 250 கிராம் அல்லது 1 1/4 கப்

* பச்சரிசி - 25 கிராம் அல்லது 1 1/2 டேபிள் ஸ்பூன்

* பாசிப் பருப்பு - 25 கிராம் அல்லது 1 1/2 டேபிள் ஸ்பூன்

கும்மாயம் செய்வதற்கு...

* கும்மாயம் மாவு - 1 கப்

* வெல்லம் - 1/2 கப்

* பனை வெல்லம் - 1/2 கப்

* நெய் - 1/4 கப்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் பனை வெல்லத்தை எடுத்து, அதில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை நன்கு கரைய வைத்து இறக்கி, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பை சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதே வாணலியில் பச்சரிசியை சேர்த்து நன்கு வறுத்து, அதையும் தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அதேப் போல் பாசிப் பருப்பையும் பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களைப் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கும்மாயம் மாவு தயார்.

* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், ஒரு கப் கும்மாயம் மாவை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* அடுத்து தயாரித்து வைத்துள்ள வெல்லப்பாகுவில் வறுத்த மாவை சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாதவாறு நன்கு கிளற வேண்டும். ஒருவேளை கலவை மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீர் சேர்த்து கிளற வேண்டும்.

* பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில், இந்த மாவை ஊற்றி குறைவான தீயில் வைத்து கட்டிகள் சேராதவாறு நன்கு கிளற வேண்டும். அப்படி கிளறும் போது சிறிது நெய்யை அவ்வப்போது ஊற்றி கிளற வேண்டும். முழு நெய்யையும் ஊற்றிவிட வேண்டாம். ஏனெனில் இது அனைத்து நெய்யையும் உறிஞ்சும் திறன் கொண்டது.

* மாவானது நன்கு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளற வேண்டும். கும்மாயம் தயார் என்றால் மாவானது கையில் ஒட்டாமல் இருக்கும். ஒருவேளை பிசுபிசுவென்று ஒட்டினால், இன்னும் கிளறி வேக வைக்க வேண்டும் என்று அர்த்தம்.

* கும்மாயம் தயாராகிவிட்டால், அதை இறக்கி நெய் ஊற்றி பரிமாற வேண்டும்.

Image Courtesy: sharmispassions

[ of 5 - Users]
Story first published: Tuesday, August 2, 2022, 16:30 [IST]
Desktop Bottom Promotion