Just In
- 48 min ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- 4 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 9 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 10 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
Don't Miss
- News கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்துள்ளனர்.. ஓட்டு போட்ட பின் அண்ணாமலை பகீர் புகார்!
- Movies மாமியார் உதட்டில் முத்தம்.. ரோபோ சங்கர் மருமகன் விளக்கம்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தங்களை எதிர்கொள்ள 10 அறிவுரைகள்!!!
கருவுற்ற பெண்களுக்குக் கவலைகள் ஏராளம். உடல் எடை கூடுகிறதே என்ற கவலை, சாப்பாட்டைப் பற்றிய கவலை, வரப்போகிற பிரசவத்தைப் பற்றிய கவலை என்று ஆயிரம் கவலைகள் இருக்கும். அதிலும் வேலைக்குச் செல்கின்ற பெண்கள் என்றால், மகப்பேறு விடுப்பு எடுப்பதற்கு முன்பாக அலுவலகத்தில் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் பற்றிய கவலை, குழந்தையை சரியாக பராமரிக்க முடியுமா, தாய்ப்பால் கொடுக்க முடியுமா, குழந்தையின் அழுகையை நிறுத்த முடியுமா, என்றெல்லாம் கவலைகள் இருக்கும். இதுப்போல, பெண்கள் கருவுற்றிருக்கும் பொழுது ஏராளமான மன அழுத்தங்கள் உருவாகக்கூடும்.
இது இயல்பானது தான். இவை தவிர்க்க முடியாதவை தான். வரப்போகிற குழந்தையை எதிர்கொள்ளவும், வரவேற்கவும் தயாராகிக் கொண்டிருக்கிற வேளையில், முன்பின் அனுபவமில்லாத ஒரு விஷயத்தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பதால், மன அளவில் மிகவும் அழுத்தத்திற்கு உள்ளாகி சக்தியிழந்தவர்கள் ஆகிவிடுவீர்கள். பிறக்கப் போகும் குழந்தைக்காக ஏற்படும் இத்தகைய மன அழுத்தம் நல்லதா அல்லது கெட்டதா?
இத்தகைய மன அழுத்தம் வந்துவிட்டால், கருவுற்ற பெண்களுக்கு மற்றொரு சந்தேகம் வந்துவிடும். அது என்னவென்றால், இத்தகைய மன அழுத்தம் குழந்தைக்கு கெடுதலை உண்டாக்கி விடுமோ என்பது தான். ஆனால் சில வல்லுநர்கள், இத்தகைய மன அழுத்தங்கள் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்கிறார்கள். கருவுற்றிருக்கும் காலத்தில், பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தால், அதன் காரணமாக குறைவான எடையுடன் குழந்தை பிறத்தல், குறைப்பிரசவம் போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு என்று கருதப்படுகிறது.
சில சந்தேகங்களையும், அவற்றால் மன அழுத்தம் ஏற்படுவதையும் நம்மால் தவிர்க்க முடியாது என்றே வைத்துக் கொள்வோம். இருப்பினும் ஏற்படுகின்ற மன அழுத்தத்தின் அளவைக் குறைக்க முடியும். அதற்கான சில வழிமுறைகள் உள்ளன. இவற்றைப் பின்பற்றினால் மன அழுத்தத்தின் அளவையும், தீவிரத்தையும் கட்டுப்படுத்த முடியும். எனவே பின்வரும் பத்து வழிமுறைகளைப் பின்பற்றிப் பாருங்கள். உங்கள் மன அழுத்தம் தானாகவே குறைந்துவிடும்.
5 நிமிடம் அமைதியைப் பெறுங்கள்
குழந்தைப்பேற்றுக்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டு இருப்பதால், எதற்குமே நேரம் இருக்காது. ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது மிக மிக பிஸியான வேலை. ஒரு குழந்தை பிறந்துவிட்டால், வீட்டில் பத்து பேர் இருந்தாலும் அத்தனை பேருக்கும் வேலை இருக்கும் என்று சொல்வார்கள். எனவே ஓய்வு எடுப்பதற்கு என்று நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள். தூங்கப்போகும் முன், ஒரு குளியல் போடுங்கள். இது புத்துணர்வூட்டுவதோடு, மனதை அமைதிப்படுத்துவதற்கான சிறந்த ஒரு வழியாகும். மேலும் நாள் முழுவதும் ஏற்பட்ட உடல் வலிகளுக்கு இதம் தரும். வேண்டுமெனில் குளிக்கும் தண்ணீரில், ஏதேனும் பிடித்தமான நறுமண எண்ணெயைக் கலந்து கொள்ளலாம். ஏனெனில் அந்த நறுமணம் பெருமளவில் அமைதியை ஏற்படுத்தும்.
மசாஜ் செய்து கொள்ளுங்கள்
மன அழுத்தத்திலிருந்து விடுபட மிகச் சிறந்த வழி மசாஜ் செய்து கொள்வது தான். அத்துடன், அதனால் உடல் வலிகளும் குறையும். மசாஜ் செய்து கொண்ட பின் மன அழுத்தத்திலிருந்து விடுபட்ட உணர்வைப் பெறுவதோடு, மிகவும் ரிலாக்ஸாக உணரக்கூடும்.
எளிமையான உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள்
மிகவும் எளிய உடற்பயிற்சிகள் மன அழுத்தம் மற்றும் உடல் வலிகளைக் குறைக்கும். அதிலும் நடைபயிற்சி மேற்கொள்ளுதல், நீச்சல் பழகுதல், யோகா வகுப்புகளில் கலந்துகொள்ளுதல் அல்லது எளிமையான யோகாசனங்களை செய்தல் ஆகியவை ரிலாக்ஸாக உணரச் செய்யும். மேலும் யோகா வகுப்புகளில் சொல்லித் தரப்படும் மூச்சுப்பயிற்சிகளைச் செய்து வந்தால், அது மன அழுத்தத்தைப் பெருமளவுக்குக் குறைக்கும். முக்கியமாக இதனை தினந்தோறும் செய்து வர வேண்டும்.
அக்குபஞ்சர் செய்து கொள்ளுங்கள்
மன அழுத்தத்தின் அளவினைக் குறைக்கும் சக்தி அக்குபஞ்சருக்கு உண்டு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த முறையில் இரத்த ஓட்டமானது சீராக இருந்து, ரிலாக்ஸாக இருப்பதை உணர வைக்கும் "எண்டார்ஃபின்" சுரப்பதைத் தூண்டும் சக்தி, அக்குபஞ்சருக்கு உண்டு.
சுவாசப் பயிற்சி செய்யுங்கள்
மன அழுத்தத்தைக் குறைப்பதில், தியானம் செய்வது மிகச் சிறந்த பலனை அளிக்கிறது என்று சில பெண்கள் சொல்கிறார்கள். எனவே தினமும் 15 நிமிடங்களாவது தியானம் செய்து வந்தால், மனம் அமைதியாகி, அதன் மூலம் உடல் சிரமங்களுக்கும் சிறப்பான இதம் கிடைக்கும்.
பிரியமானவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள்
கர்ப்பமான செய்தியை தெரிவித்தவுடன், மன நிலை எவ்வாறு இருக்கும் என்று அனைவரும் உங்களையே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இதனை குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் ஒன்பது மாதங்களும், உங்கள் நண்பர்கள், உற்றார், உறவினர், அக்கம்பக்கத்தினர் என்று அனைவரும் உங்கள் மீது அக்கறை எடுத்துக் கொண்டு, உங்கள் உடல்நலனை அடிக்கடி விசாரித்து தெரிந்து கொள்வதின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். ஆகவே ஒருவேளை மன அழுத்தம் ஏற்படுவதாக உணர்ந்தால், யாருடனாவது பேசிக் கொண்டிருங்கள். இவ்வாறு வருத்தங்கள், சங்கடங்கள், பிரச்சனைகள் குறித்து யாருடனாவது பகிர்ந்து கொண்டால், அது வடிகாலாக அமைவதுடன், அதனால் பிரச்சனைகளுக்கு தீர்வுகளும் கிடைக்கக்கூடும். மேலும் அது சில விஷயங்களில் உதவிகரமாகவும் இருக்கலாம்.
வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலைத் தயாரித்து, அது குறைவதற்குப் பதிலாக நீண்டுகொண்டே போனால், அவை அனைத்தையும் எவ்வாறு செய்து முடிக்கப் போகிறோம் என்ற கவலை கூட வந்துவிடும். ஆகவே செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல் பெரிதாக இருந்தால், அவற்றைப் பகிர்ந்து கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பொருள். குழந்தை தொடர்பான வேலைகளைச் செய்வதற்கு, உங்கள் பெற்றோரோ, உங்கள் கணவரின் பெற்றோரோ தயங்கலாம். அவர்களை விட்டுவிடுங்கள். உங்கள் பட்டியலை எடுத்துப் பாருங்கள். நீங்களாகவே ஆர்வமுடன் செய்யக்கூடிய வேலைகளைத் தவிர்த்து, பிறவற்றை யாரிடம் பிரித்துக் கொடுக்கலாம் என்று தேடுங்கள் அல்லது உங்கள் உறவினர்களோ அல்லது நண்பர்களோ தாமாக முன்வரலாம். அவர்களிடம் வேலைகளை ஒப்படையுங்கள். இதனால் நிம்மதியாக இருங்கள்.
பகலில் சற்று நேரம் தூங்குங்கள்
மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு கருவி தான் பகல் நேரத் தூக்கம். செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலைப் பார்த்து விட்டு, செய்ய முடிந்ததை செய்து விட்டு, களைப்பை உணரும் போது ஒரு குட்டித்தூக்கம் போடுங்கள். மேலும் எப்போதெல்லாம் தூங்க வேண்டும் என்பது போல உணருகிறீர்களோ, அப்போது தூங்கினால் கூடப் போதும். குறிப்பாக உயரமான தலையணைகளை அடுக்கிக் கொண்டு வசதியாகத் தூங்குங்கள்.
முடியாது என்று சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள்
மகப்பேறு விடுப்பில் செல்வதற்கு மூன்று நாட்கள் முன்பாக, அலுவலகத் தலைவர் உங்களிடம் வந்து 40 பக்க அறிக்கை ஒன்றை தயாரித்துத் தர முடியுமா என்று கேட்டால், உடனடியாக முடியாது என்று சொல்லிவிடுங்கள். ஏனெனில் சில அழுத்தங்களை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் சிலவற்றை நீங்களே கட்டுப்படுத்தலாம். மன அழுத்தம் வராமல் தடுப்பதற்கு, உங்கள் எல்லைகள், வரையறைகள மற்றும் உங்கள் திறன் ஆகியவற்றை தெரிந்துகொள்வது மிக முக்கியம்.
கவலைகளை தவிர்த்துவிடுங்கள்
ஒரு சிறிய வலையில் மாட்டிக் கொண்டால், நெடுந்தூரம் செல்ல வேண்டிய பயணத்தை இழந்துவிடுவோம். இன்னும் சிறிது நாட்களில் மடியில் குழந்தை தவழப் போகிறது. குழந்தையின் முகத்தை முதன் முதலாகக் காணப்போகிறீர்கள். இப்போதுள்ள சின்னச் சின்னக் கவலைகளெல்லாம் அப்போது பெரிதாகத் தோன்றாது. ஆகவே நீங்கள் எதை நோக்கிச் செல்கிறீர்கள், எது எதெல்லாம் உங்களுக்கு முக்கியம் என்பதை புரிந்துகொண்டு அதன்படி செயல்படுங்கள்.
குழந்தையை நல்லமுறையில், மன அழுத்தமின்றிப் பெற்றெடுப்பது தான் தலையாய நோக்கம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மற்ற கவலைகளை மறந்துவிடுங்கள் அல்லது அலட்சியப்படுத்திவிடுங்கள். உடல் எடை குறைவு, தூக்கமின்மை போன்ற இதர மன அழுத்தங்களுக்கும் ஆளாகியுள்ளீர்கள் என்றால் மருத்துவரைக் கலந்து ஆலோசித்து, அவரது அறிவரைப்படி செயல்படுங்கள்.