கர்ப்பகால நெஞ்செரிச்சல்: அதிக காரம் ஆகாது!

By Mayura Akilan

கர்ப்பகாலத்தில் கருப்பையில் ஏற்படும் மாற்றங்களினால் கர்ப்பிணிகளுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுகின்றன. இதனால் அச்சம் கொள்ளத் தேவையில்லை எளிய முறையில் இயற்கையான மருத்துவ முறைகளை பின்பற்றி அவற்றைப் போக்கிவிடலாம் என்கின்றனர் மகப்பேறு நிபுணர்கள்.

கர்ப்பகாலத்தில் அதிக காரம் நிறைந்த உணவுகளையும், எண்ணெயில் பொரித்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும் இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு புரஸ்ரோஸ்ட்ரோன் ஹார்மோன் சுரப்பு அதிகமாக காணப்படும். இது தசைகளை விரிவடையச் செய்ய உதவும், அதேசமயம் வயிறு, கர்ப்பப்பை போன்றவை எளிதாக விரிவடையவும் இந்த ஹார்மோன் உதவுகிறது. இந்த சமயத்திற்கு வயிற்றுப் பகுதியில் அமிலச் சுரப்பு அதிகரிப்பதால் மிகவும் சென்சிடிவ் பகுதியான, மார்பிலும், தொண்டைப்பகுதியிலும் எரிச்சல் ஏற்படுகின்றன. புளித்த ஏப்பம் ஏற்படுகிறது.

அமிலச் சுரப்பை தடுக்க

இனிப்பு குறைந்த சுவிங்கம் மெல்வது வயிற்றில் அமிலம் சுரப்பதை கட்டுப்படுத்தும்.

ஒரு டம்ளர் பாலில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து பருகுவது அமிலச்சுரப்பைக் கட்டுப்படுத்தும். அதேபோல். கர்ப்ப காலத்தில் ஐஸ் கீரிம் சாப்பிடுவது மிகச்சிறந்த முறையாகும். கர்ப்பிணிகள் இஞ்சி டீ உட்கொள்வது ஜீரண சக்தியை அதிகரிக்கும் உணவு உண்டபின் அரைமணி நேரம் கழித்து இஞ்சி டீ பருகலாம். அது அமிலச் சுரப்பு ஏற்படுவதை தடுக்கும்.

கர்ப்பிணிகள் உறங்கும் போது இடது பக்கம் தலை வைத்து படுப்பது நல்லது இது ஜீரணத்தன்மையை அதிகரிக்கும். உணவு உண்ட உடனே உறங்கச் செல்வது ஆபத்து. எனவே படுக்கைக்குச் செல்லும் முன் 2 மணி நேரங்களுக்கு முன்பாக உணவு உட்கொள்வது ஜீரண கோளாறு ஏற்படுவதை தடுக்கும்.

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது கர்ப்ப காலத்தில் நல்லது. இது நெஞ்சு எரிச்சல் ஏற்படுவதை தடுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

அமிலச்சத்துள்ள பழங்கள்

வறுத்த உணவுகள். காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும்,காபி, டீ போன்றவைகளையும், ஆல்கஹால், சாக்லேட், கார்பனேட் அடங்கிய குளிர்பானங்களை அறவே தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சிட்ரிக் அமிலம் நிறைந்த ஆரஞ்சு, தக்காளி, வினிகர், திராட்சை போன்றவைகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும். அதற்குப் பதிலாக பச்சை நிற காய்கறிகள், கீரைகளை உட்கொள்ளவேண்டும். கர்ப்பிணிகள் மொத்தமாக உணவு உண்பதை விட சிறிது சிறிதாக 5 வேளை உணவு எடுத்துக்கொள்ளலாம். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும். புளித்த ஏப்பம், நெஞ்சு எரிச்சல் ஏற்படாது.

Story first published: Saturday, February 18, 2012, 15:36 [IST]
Desktop Bottom Promotion