பயணத்தின் போது பாலுட்ட சிரமப்படுறீங்களா? சில ஆலோசனைகள்.

By Mayura Akilan

Travel Tips for Breast feeding
கைக்குழந்தையை எங்காவது வெளியில் அழைத்துச் சென்றாலே அவர்களுக்கு பாலூட்டுவது சிரமமான காரியமாக இருக்கும். அதுவும் பேருந்து பயணத்தின் போது கேட்கவே வேண்டாம் பசியால் அழுது ஆர்பாட்டம் பண்ணும் குழந்தைகளை சமாளிப்பது சாதாரண விசயமில்லை. இதுபோன்ற சமயங்களில் என்ன செய்து சமாளிக்கலாம் என்று ஆலோசனை கூறுகின்றனர் சில அனுபவசாலிகள்.

தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பாட்டில் பால் உடனே ஒத்துக்கொள்ளாது அதுவும் பயணத்தின் போது மட்டும் பாட்டிலில் பால் ஊற்றிக்கொண்டு போனால் அதுவே அவர்களுக்கு அலர்ஜியாகிவிடும். எனவே தாய் பால் ஊட்டும் காலத்தில் அதற்கென விசேசமாக தைக்கப்பட்டுள்ள ஜாக்கெட்டுகளை அணிந்து கொள்ளலாம். உடனே பாலூட்ட வசதியாக இருக்கும். கண்டிப்பாக சுடிதார் போட்டு பயணம் செய்யாதீர்கள் உங்கள் பாடு திண்டாட்டமாகிவிடும்.

ஜவுளிக்கடை, தியேட்டர் போன்ற பொது இடங்களில் பாலூட்டுவது என்பது சிரமமான விசயம். ஜவுளி கடைகளில் ட்ரையல் ரூம் எங்கிருக்கிறது என்று முதலிலேயே பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். தியேட்டர் என்பது இருட்டான இடம் என்பதால் கவலையில்லை. இருந்தாலும் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு சிரமமில்லாத வகையில் பாலூட்ட கற்றுக்கொள்ளுங்கள். பெரும்பாலான டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் கடைகளில் நர்சிங் அறை என்று தனியாக அமைக்கப்பட்டிருக்கும் அங்கு சென்றும் பாலூட்டி வரலாம்.

பொது இடங்களில் அமர்ந்து பாலூட்டும் போது துணி விலக நேரலாம் அல்லது உங்கள் ஆடையானது குழந்தையையும் உங்களையும் சரியாக கவராமல் இருக்கலாம். திடீரென பால் அதிகமாக வெளியேறும். இதனை தவிர்க்க வெளியிடங்களுக்கு செல்லும் போது ப்ரஸ்ட் பம்ப் மூலம் பாலை எடுத்து பாட்டிலில் அடைத்து கொண்டு செல்லலாம். ப்ரஸ்ட் பேடுகளை எடுத்து செல்ல வேண்டும். ஏனெனில் பால் அதிகம் சுரக்கும் நேரத்தில் ப்ரஸ்ட் பேடுகளை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் மற்றவர்களுக்கும், தாய்மார்களுக்கும் ஏற்படும் கூச்சத்தை தவிர்க்கலாம்

தாய்பால் கொடுப்பது சாதாரண விசயமில்லை. அது உணர்வு பூர்வமான ஒரு விசயம். தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கும் முன் குழந்தையை மார்பகத்தோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகுதான் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். குழந்தை விருப்பப்படும் போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அது எவ்வளவு நேரம் விரும்பி பால் குடிக்கிறதோ, அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும்.

தாய்ப்பால் குடித்த குழந்தைக்கு உடனே தண்ணீர் கொடுக்க முயற்சிக்கக்கூடாது. அதேபோல் உடனே படுக்க வைக்க கூடாது. தோள் மீது போட்டு லேசாக தட்டி கொடுத்து குழந்தை ஏப்பம் விட்ட உடன்தான் படுக்க வைக்கவேண்டும். இல்லையெனில் குடித்த பால் எல்லாம் வாந்தியாக வெளியேறிவிடும். என தாய்பால் கொடுக்கும் போது சரி கொடுத்து முடித்த உடனும் சரி குழந்தையை ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.

Story first published: Saturday, May 26, 2012, 13:39 [IST]
Desktop Bottom Promotion