பாலூட்டும் அன்னையரே, அதிக வலிநிவாரணி குழந்தைக்கு ஆபத்து!

By Mayura Akilan

Breastfeeding
பிரசவத்திற்குப் பின்னர் அன்னையர் உட்கொள்ளும் வலி நிவாரணி மருந்துகளால் சிசுக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சிசேரியன் செய்துகொண்ட அன்னையர் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் மருந்தானது தாய்பால் மூலம் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தி உயிரையும் குடித்துவிடும் என்று எச்சரித்துள்ளனர் ஆய்வாளர்கள்.

பிரசவம் என்பது மறுபிறப்பிற்கு ஒப்பானது. சுகப்பிரசவம் ஏற்பட்டதன் வலி ஒரிரு நாளில் சரியாகிவிடும். அதே சமயம், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்களுக்கு ஒருமாதம் வரை கூட வலி நீடிக்கும். இந்த வலியை மறந்து தூங்குவதற்காகவே தாய்மார்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த மாத்திரைகளை உட்கொள்ளும் தாய்மார்கள் தங்களின் சிசுக்களுக்கு பாலூட்ட வேண்டியுள்ளது. இதனால் சில சமயங்களில் ஆபத்து ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோடைன் எனப்படும் மருத்துவப் பொருள் அடங்கிய வலி நிவாரணிகளை அதிகம் உட்கொள்வது குழந்தைகளின் உடல் நலத்தைப் பெருமளவில் பாதிப்பதாக கனடா நாட்டு மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

உயிரை பாதிக்கும்

பிரசவ கால வலிகளிலிருந்து தப்புவிக்க தாய்மார்களுக்கு கோடைன் எனப்படும் மருத்துவப் பொருள் அடங்கிய வலி நிவாரணிகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாய்மார்களுக்கு இந்த மருத்து அத்தியாவசியத் தேவை என்பது குறிப்பிடத் தக்கது.

பாலூட்டும் தாய்மார்கள் தங்களுடைய உணவுப் பழக்கவழக்கம், மருந்து உட்கொள்தல் போன்றவற்றில் அதீத கவனம் செலுத்துவதுண்டு. உண்ணும் உணவின் மூலமும், மருந்துகளின் மூலமும் உடலில் கலக்கும் ரசாயன பொருட்கள் பால் வழியாக குழந்தையின் உடலுக்குள் செல்கிறது என்பதே. அதனால்தான் பிரசவகால பத்தியம் கூட தாய்மார்கள் மேற்கொள்கின்றனர்.

வலி நிவாரணி ஆபத்து

தாய்மாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத இந்தப் பொருள் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், உறுப்புகள் பாதிப்பு, மயக்கம் போன்ற பலவிதமான இன்னல்களை உருவாக்குகின்றது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தாய்மார்கள் தங்கள் வலியைப் போக்க அளவிற்கு அதிகமாக உட்கொள்ளும் மருந்து குழந்தையின் உடலுக்குள்ளும் பாய்ந்து உயிரையும் பறித்துவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே பாலூட்டும் அன்னையர்கள் தேவையற்ற மருத்துகளைத் தவிர்க்க வேண்டுமெனவும் இந்த ஆராய்ச்சி முடிவு எச்சரித்துள்ளது.

Story first published: Tuesday, January 31, 2012, 10:43 [IST]
Desktop Bottom Promotion