ஏன் குழந்தைகளுக்கு தண்டனை கொடுக்கக்கூடாது என்று தெரியுமா?

By Aruna Saravanan

தண்டனைகள் குழந்தைகளை திருத்துமா? குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அனைவருக்கும் இந்த கேள்வி வந்திருக்கும். பிள்ளைகளை நன்முறையில் வளர்க்க வேண்டும் என்று நினைத்து அவர்களை கண்டிப்புடன் வளர்க்கும் பெற்றொர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் தண்டனை. நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பேச்சை கேட்காத பிள்ளையை திருத்துகின்றேன் பேர்வழி என்று அதிக தண்டனைகள் வழங்கினால் உங்கள் பேச்சை இன்று வேண்டுமானால் கேட்பார்கள். ஆனால் பிற்காலத்தில் உங்களைப் பற்றிய தப்பான கருத்தும், தண்டனையின் வலியும் வடுவாக அவர்கள் இதயத்தில் பதிந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

கடவுளை வேண்டி பெற்றெடுக்கும் பிள்ளையை வளர்க்கும் போது மட்டும் பொறுமை எங்கே போய் விடுகின்றது என்று தான் தெரியவில்லை. இன்று மரம் செடி கொடிகளுக்கெல்லாம் உயிர் இருக்கின்றது என்று பேசும் நாம் நம் உயிரை கொடுத்து பெற்ற குழந்தைகளை வளர்க்க தெரியாமல் தவிக்கின்றோம். இதை செய்யாதே அதை செய்யாதே என்று கூறி எதற்கு எடுத்தாலும் தண்டனை வழங்கி சித்திரவதை செய்கின்றோம். இதில் கவலை என்னவென்றால் நாம் செய்வது தவறு என்று கூட தெரியாமல் இதை செய்வதுதான்.

ஆகையால் தண்டனை கொடுப்பதை விட்டு விட்டு அறிவுரைகளால் திருத்துவதையும், வளர்ப்பதையும் பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டும். சரியாக சிந்திக்க தெரியாத பெற்றோர்கள் அமைதியாகவும், அன்புடனும், மிகுந்த பொறுமையுடனும் கண்டிக்கப்பட வேண்டிய பிள்ளைகளை அடக்கு முறையில் தண்டனை கொடுத்து தீய வழியில் அவர்கள் செல்ல தூண்டுகின்றார்கள். ஏன் தண்டனைகள் சரிபட்டு வராது என்று பார்ப்போம்

குழந்தைகளுக்குத் தண்டனை வேண்டாம் ஏன் தெரியுமா?

தண்டனைகள் கசப்புணர்வை வளர்க்கும்

punishing students in school

குழந்தையை அடித்து பல வித தண்டனைகள் வழங்கினால் உங்கள் குழந்தைகள் உங்களை முன்புபோல் நேசிப்பார்கள் என்று நினைக்கின்றீர்களா? கண்டிப்பாக இல்லை. உங்களை வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். பின் என் குழந்தை என் மீது அன்பாகவே இல்லை என்றால் பயன் இல்லை. அன்பை கொடுத்துதான் அன்பை பெற வேண்டும். கொஞ்சம் அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து பேசுங்கள் போதும் புரிந்து கொள்வார்கள்.

தண்டனை குழந்தைகளுக்குப் பெற்றோர்களை எதிர்க்க சொல்லி தரும்

ஒரு சில குழந்தைகள் தண்டனைகளை ஆரம்ப காலத்தில் பொறுத்து கொள்வார்கள். ஆனால் போக போக அதுவே வெறுப்பாக மாறி பெற்றோர்களை எதிர்க்கும் அளவிற்கு வந்து விடும். இது மிகவும் ஆபத்தானது. இதனால் அவர்களால் வீட்டிற்கு மட்டுமில்லை நாட்டிற்கும் தொல்லையே. சமுதாயத்தில் ஆபத்தான காரியங்களை செய்ய அவர்கள் முனைந்து விடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் பெற்றோர்களே.

தண்டனை பயத்தை அதிகரிக்கும்

தண்டனைகளைத் தாங்கி வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் பயந்த சுபாவம் அடைவார்கள் என்று ஆராய்ச்சிகள் தெளிவு படுத்துகின்றன. இதனால் எப்பொழுதும் பயத்துடனே காணப்படும் பிள்ளைகள் எதை சாதிப்பார்கள் என்று நினைத்து பாருங்கள். இதனால் உளவியல் ரீதியான பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ளக் கூடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

தண்டனை தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கும்

தாழ்வு மனப்பான்மை கொண்ட பல குழந்தைகள் சிறு வயதில் அதிக தண்டனைகளை அனுபவித்தவர்கள். குழந்தைகள் செய்யும் சிறிய தவறுக்கு பெரிய அளவில் தண்டனை கொடுக்கும் பெற்றோர்களே ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் பிள்ளைகள் தாழ்வு மனப்பான்மை அடைவார்கள். மேலும் வாழ்வில் வேறு எந்த முன்னேற்றமும் இல்லாமல் வாழ்வின் மீது வெறுப்பு கொண்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கூட தள்ளப்படுவார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்

ஆகவே அன்பை கொண்டு குழந்தைகளை வளர்க்க வேண்டும். அடக்கு முறை கொண்டால் நீங்கள் பெற போவது, யானை தன் தலையில் தானே மண்ணை வார்த்தது போல் தான் ஆகும். என்ன புரிந்ததா?

Read in English: Why Punishments Don't Work
Desktop Bottom Promotion