சரியா தூங்கலையா?.. இதய நோய் தாக்கும் ஜாக்கிரதை!

By Mayura Akilan

Sleeping Disorder
குழந்தைகளும், டீன் ஏஜ் வயது சிறுவர்களும் சரியாக தூங்காமல் இருந்தால் அவர்களை கட்டாயப்படுத்தியாவது தூங்க வைக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். நள்ளிரவு வரை தூங்காமல் தொலைக்காட்சி பார்ப்பதும், கனிணியில் விளையாடுவதும் சிறுவர்களின் இதயத்தைப் பாதிக்கும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

இன்றைக்கு 24 மணி நேரமும் தொலைக்காட்சியில் ஏதாவது நிகழ்ச்சியைப் போட்டு குழந்தைகளையும், டீன் ஏஜ் வயதினரையும் கொட்ட கொட்ட விழிக்க வைக்கின்றனர் தூங்காமல் இருக்க வைப்பதற்காக ஊடகங்கள் நள்ளிரவுக்கு மேலும் விழித்திருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும், கணினியில் விளையாடுவதும், செல்போனில் பேசுவதும் என இன்றைய இளம் வயதினரின் தூக்கத்தைக் கெடுக்கும் வழிகள் ஏராளமாய் இருக்கின்றன. இவையெல்லாம் உடல்நலத்துக்கு பெரிதும் தீங்கானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

உயர் ரத்த அழுத்த நோய்

தூக்கத்தை கெடுத்துக்கொள்ளும் பதின் வயதினருக்கு உயர் ரத்த நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒழுங்கான தூக்கம் இல்லாதவர்கள் அதிக எடையுடையவர்களாய் மாறும் அபாயம் இருப்பதாக முன்பு ஒரு ஆராய்ச்சி முடிவு வெளியிட்டிருந்தது. இப்போது அதைவிட அச்சமூட்டும் வகையில் அமைந்துள்ளது இந்த ஆய்வு முடிவு.

தூக்கம் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவு இயக்குனர் சூசன் ரெட்லைன் பதின் வயதினரின் உடல் நலம் தொடர்பான ஆய்வு மேற்கொண்டார். 13 முதல் 19 வயதினர் இடையே உள்ளவர்கள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் சுமார் நாற்பது சதவிகிதம் பேர் குறைந்த தூக்கம், அல்லது நிம்மதியற்ற தூக்கத்தையே கொண்டிருப்பதாக தெரிய வந்தது.

இதன் முடிவு தூக்கம் தொடர்பான மற்ற ஆராய்ச்சி முடிவுகளை விட அச்சுறுத்தக் கூடியது என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்தனர். தூக்கம் குறைவானது இளம் வயதினருக்கு உயர் ரத்த அழுத்த நோய் ஏற்பட வழி வகுக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதயநோய்க்கு வழிவகுக்கும்

தற்போதைய வாழ்க்கை முறை பதின் வயதினரை பல்வேறு விதமான கேளிக்கைகளுக்குள் இழுத்துச் சென்று அவர்களுடைய நேரத்தையும், உடலையும் வீணடிக்கிறது. கிடைக்கும் ஓய்வு நேரத்தில் உடலுழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளில் ஈடுபடுவது இரவில் நல்ல தூக்கத்துக்கு உத்தரவாதம் தரும். அதை விடுத்து வெறுமனே தொலைக்காட்சி பார்ப்பதோ, கனிணியில் விளையாடுவதோ குழந்தைகளின் உடல் நலத்தைத்தான் பாதிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். உயர் ரத்த அழுத்தம் என்பது இதய நோய் உட்பட பல்வேறு பெரிய நோய்கள் வருவதற்கான காரணமாகி விடக் கூடும் என்பதால் இந்த ஆராய்ச்சியானது மருத்துவ உலகில் முக்கியத்துவம் பெறுகிறது.

அதேபோல் டொராண்டாவில் உள்ள இதய நோய், பக்கவாத மருத்துவமனையின் ஆய்வாளர் மேற்கொண்ட ஆய்வில் தூக்கக் கெடுதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதயநோய், பக்கவாதம் போன்ற நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம் என்று நிரூபித்துள்ளனர்.

இனி குழந்தைகளைப் பார்த்து தூங்காதே தம்பி தூங்காதே என்று பாடிய காலம் போய் நல்லா தூங்கும்மா செல்லம் என்று தாஜா செய்ய வேண்டியதுதான்...

Story first published: Tuesday, January 31, 2012, 15:25 [IST]
Desktop Bottom Promotion