செல்போன் கலாச்சாரத்தால் சீரழியும் மாணவர்கள்: பெற்றோர்கள் கவலை

நெல்லை: செல்போன் கலாச்சாரத்தால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் ஒன்றான செல்போனால் பொதுமக்களுக்கு பல நன்மைகள் ஏற்பட்டாலும் சமுதாயத்தை சீரழிக்கும் பல தீமைகளும் உள்ளன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தற்போது செல்போனால் சீரழிந்து வருகின்றனர். மாணவர்களின் செல்போனில் அருவருக்கத்தக்க படங்கள் உள்ளன. இதனால் அவர்களின் மனது பாழாகி குற்றச் செயல் புரிய தூண்டப்படுகின்றனர்.

பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடைகளை மீறி செல்போன்களை பள்ளி, மற்றும் கல்லுரிகளுக்கு கொண்டு செல்கின்றனர். மாணவர்களிடம் புழக்கத்தில் உள்ள செல்போன்களை வாங்கி மெமரி கார்டுகளை போலீசார் சோதனையி்ட்டு ஆபாச படங்களை அதில் வைத்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையங்களிலும், பள்ளி, கல்லூரி அருகிலும் செல்போன் மன்மத ராஜாக்களின் அட்டூழியம் அதிகரித்து வருவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மாணவர்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்ல ஒரு சில செல்போன் கடைகள் துணை புரிகின்றன. இங்கு மாணவர்களுக்கு ஆபாச படங்கள் மெமரி கார்டில் பதிவு செய்து வழங்குவதாகவும் பெற்றோர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Story first published: Monday, August 15, 2011, 17:57 [IST]
Desktop Bottom Promotion