புது தந்தைமார்களே! உங்க குழந்தையோடு உறவை எப்படி மேம்படுத்த போறீங்க....

By Super

குழந்தை செல்வம் ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்று பலர் சொல்லி கேட்டிருப்போம். சரி, அது பெண்ணுக்கு மட்டும் தானா? இல்லையென்று சொல்வர் அனைத்து தந்தைமாரும். நீங்க அப்பா ஆகிடீங்க! என்ன கேக்கவே வானில் பறக்கும் உணர்வு ஏற்படுகிறதா? ஆம், ஒரு ஆண், தந்தை என்ற ஸ்தானத்தை அடையும் போது, அவன் அடையும் மகிழ்ச்சி எல்லைக்கு அளவே கிடையாது. குழந்தை வந்தப் பின் மாற்றங்களும் உண்டாகும். உதாரணத்திற்கு, குழந்தைக்கு டையப்பர் மாற்றுவது அல்லது அழும் குழந்தையை சாந்தப்படுத்துவது போன்றவைகள். ஆகவே புது வரவு இந்த பூமிக்கு வருவதற்கு முன்னரே அதனுடன் ஒரு வலுவான இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த வலுவான உறவை ஏற்படுத்துவதற்கு இதோ சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

சீக்கிரமே தொடங்குங்கள்:

மனைவியின் கர்ப்பக் காலத்தில். அவருடைய வயிற்றுக்கு முன் அடிக்கடி பாடுவதும். புத்தகம் படிப்பதும், பார்ப்பதற்கு விசித்திரமாக இருக்கும். ஆனால் இப்படி செய்வது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும், கருவில் இருந்து வெளியே வரும் முன்னரே ஒரு வலுவான பந்தத்தை ஏற்படுத்தும். மேலும் பிறந்த பின் குழந்தை, உங்களின் குரலோசையையும், பேச்சு வகைகளையும் விரைவிலேயே புரிந்துக் கொள்ளும். மேலும் மனைவிக்கு அவருடைய கர்ப்பக் காலத்தில் பக்க பலமாக இருப்பதாலும், குழந்தையுடனான உறவு பலமாகும்.

குழந்தை பற்றிய அனைத்தும் உங்களுக்கு புதிதா? அப்படியானால் அதனை உடனே பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். அதற்கு செய்ய வேண்டியது, குழந்தை பிறக்கும் முன் புதிதாக தந்தை ஆகியுள்ள நண்பர் யாரிடமாவது ஒரு நாள் செலவிட்டு, அந்த அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். இந்த அனுபவம் புது வரவை கையாள, நம்பிக்கையை ஏற்படுத்தும். மேலும் குழந்தை இந்த உலகத்தை பார்த்த முதல் நாளில், மருத்துவமனையிலிருக்கும் செவிலியர்களிடம் தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

New Dads: How to bond with your baby

கவலையை விடுங்கள்:

தந்தையானவன், குழந்தையுடன் இயற்கையிலேயே வலுவான இணைப்பு உள்ளது என்ற உங்கள் கற்பனையை முதலில் மாற்றுங்கள். நீங்கள் உங்கள் குழந்தையுடன் நேரத்தை அதிகமாக செலவிட்டால், உங்கள் இருவரின் உறவு ஆழமாக வளரும். பிறந்த குழந்தைக்கும், தாய்க்கும் இருக்கும் உறவை பார்க்கும் போது, முதல் சில நாட்களுக்கு உங்களுடனான பந்தம் தெரிவதில்லை. ஆனால் அது இல்லையென்று அர்த்தமில்லை. நாளாக நாளாக, அது தன்னால் வெளிப்பட தொடங்கி விடும். நீங்களும் உங்கள் மனைவியும் சேர்ந்து, உங்கள் பிள்ளையை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். தந்தைமார்கள் பதட்டப்படாமல், இயல்பாக இருந்து, மனைவிக்கு குழந்தையை வளர்ப்பதில் உதவி செய்து, குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு முக்கியமான தருணங்களை கொண்டாடி மகிழ வேண்டும். உள்ளே நுழைந்தால் தான், புது பெற்றோரான உங்களுக்கு உங்கள் குழந்தையை வளர்ப்பதில் நம்பிக்கையை உண்டாக்கும்.

ஸ்பரிசத்தில் ஈடுபடுங்கள்:

குழந்தை பிறந்த முதல் சில நாட்களில் அல்லது சில வாரங்களில், குழந்தையின் மேல் படும் உங்கள் ஸ்பரிசம் இருவரையும் நெருக்கமாக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம், குழந்தையை தூக்கி வைத்துக் கொள்ளுங்கள். தோளில் போட்டு தட்டிக் கொடுங்கள். கைகளில் போட்டு மெதுவாக சீராட்டுங்கள். நீங்கள் மூச்சு விடுவதால், நெஞ்சு மேலும் கீழும் சென்று வருமல்லவா, அது உங்கள் குழந்தைக்கு சொகுசாக இருப்பதால், மார்பு மீது படுக்க வைத்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் இதயத்துடிப்பு அதற்கு கேட்பதால், அதன் உடம்பின் வெப்ப நிலை சீராக வைக்க உதவும்.

பல முகங்களை மாற்றுங்கள்:

உங்கள் மனைவி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறாரா? தலை கீழாக நின்றாலும் உங்களால் அது முடியாது. ஆனால் உங்களின் பங்களிப்பை நீங்கள் வேறு சில வழிகளின் மூலமாக வெளிக்காட்டலாம்.

தந்தைமார்கள் தங்கள் குழந்தையை குளிப்பாட்டுதல், ஆடைகள் அணிவித்தல் மற்றும் டையப்பர் மாற்றுதல் போன்ற காரியங்களில் ஈடுபடலாம். குழந்தைக்கு புத்தகம் படித்துக் காட்டுவது, குழந்தையை அணைத்துக் கொள்வது போன்றவைகளையும் செய்யுங்கள். மேலும் குழந்தையை தொட்டிலிலிருந்து தாய்ப்பால் கொடுக்க தாயிடம் எடுத்துச் செல்லுங்கள். முக்கியமாக நடுராத்திரியில் குழந்தை பாலுக்காக அழும் போது இதனை செய்யுங்கள். உங்கள் குழந்தைக்கு நீங்கள் செய்ய விரும்பும் வேலையை செய்து, உங்கள் உறவை வழுப்படுத்திக் கொள்ளுங்கள்.

Desktop Bottom Promotion