பருவமழை தொடங்கியாச்சு : பட்டுக்குட்டிகள் பத்திரம்!

By Mayura Akilan

Kids Rainy Wear
கோடை காலம் முடிந்து விட்டது மெல்ல மெல்ல தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கொளுத்தி வெயிலுக்கு இதமாக மழை பெய்வதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மழையை கொண்டாடுவார்கள். மழையில் நனைந்தும், ஆடி பாடியும் மகிழ்ச்சியடைவார்கள். மழைக்காலம் வந்தாலே குட்டீஸ்க்கு நோய்கள் தாக்கத் தொடங்கும் எனவே பருவமழைக் காலத்தில் பட்டுக்குட்டிகளை எப்படி பாதுகாக்கலாம் என்பது குறித்து நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர் படியுங்களேன்.

மழை காலத்தில் கொசு தொந்தரவு அதிகம் இருக்கும். எனவே கொசுக்கள் அதிகம் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்கள், படுக்கையை சுற்றிலும், கொசுவலை கட்டுவதோடு, ஜன்னல்களிலும் வலை பொருத்தலாம்.

கொசு உற்பத்திக்கான காரணிகளை தவிர்க்க வேண்டும். அதாவது, ஏர் கூலர்களில் தண்ணீர் தேங்காமல் கவனித்துக் கொள்ள வேண்டும். தோட்டம், குடியிருப்பு மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கொசுக்கள் அதிகளவில் காணப் பட்டால், வாசனையற்ற கொசுவர்த்திகள் போன்றவற்றை வாங்கி பயன்படுத்தலாம். சிலருக்கு இந்த வாசனைகள், "அலர்ஜி'யை ஏற்படுத்தி விடும்.

டெங்கு' காய்ச்சலை பரப்பும் கொசுக்கள், பகல் நேரத்திலும், மலேரியாவை பரப்பும் கொசுக்கள் மாலை நேரத்திலும் கடிக்கும். எனவே, அனைத்து வேளைகளிலும், கொசு கடிப்பதில் இருந்து உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகளின் உடலை எப்போதும், சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். பூஞ்சை தொற்று ஏற்படாமல் தடுக்கும் சோப்புகளை பயன்படுத்தலாம். பூஞ்சை தொற்றை தடுக்கும் பவுடர்களை, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை, தொடை, மார்பின் கீழ்பகுதி மற்றும் கால் ஆகிய பகுதிகளில் போடலாம்.

மழைக் காலத்தில் தண்ணீரினால் வயிற்று போக்கு ஏற்படுவது இயல்பு. குழந்தைகளின் உடலின் நீர் வற்றி விடாமல் இருக்க இளநீர் அல்லது எலுமிச்சை சாறுடன், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கினால் உண்டாகும் நீரிழப்பை ஈடுகட்ட, தண்ணீர் கொடுக்க வேண்டும். உதடு மற்றும் நாக்கு வறண்டு போகாமல் இருக்க, பஞ்சில் நீரை தொட்டு, தேய்க்கலாம்.

வயிற்றுப்போக்கு நிற்க தொடங்கியதும், படிப்படியாக, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய ஆப்பிள், சூப், பருப்பு சாதம் போன்ற உணவுகளை சாப்பிட தொடங்கலாம். வயிற்றுப் போக்கில் இருந்து முழுமையாக விடுபடும் வரை, பால், காபி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

கண்கள் குழிந்து காணப்படுதல், வெளிறிய தோல், குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், குளிர்வது போன்ற உணர்வு மற்றும் எவ்வித உணவோ, தண்ணீரோ சாப்பிடாமல் இருந்தால், உடனே டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

இது போல பாதுகாத்தால் உங்கள் பட்டுக் குழந்தைகளை மழைக்கால நோயிலிருந்து காத்திடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

Story first published: Wednesday, June 27, 2012, 15:46 [IST]
Desktop Bottom Promotion