குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தாய்ப்பால்

By Mayura Akilan

Breast Feeding
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதனால் அவர்களின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச தாய்பால் வாரம் கடைபிடிக்கப்படும் இந்த நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பதனால் குழந்தைகள் ஏற்படும் நன்மைகள் பற்றிய ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.

தாய்க்கும் சேய்க்கும் இடையேயான பாசத்தை அதிகரிப்பது தாய்ப்பால். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். முதல் முறை கொடுக்கப்படும் பாலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் காணப்படுகிறது. குழந்தைக்கு தேவையான புரதங்கள் இதில் அடங்கியுள்ளன. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் இதற்குக் காரணம் அதில் அடங்கியுள்ள கொழுப்பு அமிலங்கள்தான்.

தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகள், நோய்வாய்ப்படும் வாய்ப்பு அதிகம். எனவே குழந்தை பிறந்தது முதல், ஆறு மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் எனவும், குழந்தையின் உடல்நிலையை பொறுத்து 2 வயது வரை தாய்ப்பால் வழங்க வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.

குழந்தை மரணங்களும் தாய்ப்பால் தருவதால் தவிர்க்கப்படுகிறது. ஒவ்வாமை, காதுகளில் ஏற்படும் தொற்று போன்றவற்றிலிருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. குழந்தைகளின் பற்கள், நாக்கு உட்பட பேச பயன்படும் உறுப்புகள் வேகமாக வளர்ச்சியடைய தாய்ப்பால் தருவது அவசியம். குழந்தைக்கும், தாய்க்கும் இடையேயான பிணைப்பு தாய்ப்பால் தருவதன் மூலம் அதிகரிக்கிறது.

யுனிசெப் நிறுவனம் உலகம் முழுவதும் ஆய்வு நடத்திய கணக்கெடுப்பின் படி, உலகம் முழுவதும் 13 கோடியே 67 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன என்றும், இதில் 32.6 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே "ஆறு மாதம் தொடர்ந்து தாய்ப்பால் வழங்கப்பட்டுள்ளது' எனவும் தெரிய வந்துள்ளது. மேலை நாடுகளின் பெரும்பாலான பெண்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர விரும்புவதில்லை. இதேபோல் இந்தியாவில் உள்ள இளம் தாய்மார்களும் அழகை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதை சிலவாரங்களிலேயே நிறுத்திவிடுகின்றனர் என்பது வேதனைக்குறியது. எனவே குழந்தைகளுக்க தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம், சர்வதேச தாய்ப்பால் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, August 1, 2012, 17:51 [IST]
Desktop Bottom Promotion