குழந்தைகளின் வயிற்றுப் பிரச்சினைகளுக்கு இதம் தரும் சடை குப்பி

By Mayura Akilan

Dill
நம் வீட்டருகிலேயே வளரும் தாவரங்கள் பலவும் ஆயுர்வேத மருத்துவத்தில் மூலிகைகளாக பயன்படுத்தப்படுகின்றன. சடைகுப்பி எனப்படும் மணமுள்ள தாவரம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பயிரிடப்படுகிறது. தெற்கு ஆசியா, மத்திய ஆசியா, ஐரோப்பா, ஆகிய நிலப்பரப்பில் இது அதிக அளவில் காணப்படுகிறது. இத்தாவரம் மஞ்சள் வண்ண மலர்களைக் கொண்டவை. கனிகள் கிளர்ச்சியூட்டும் மணம் நிறைந்தவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

விதை மற்றும் கனிகளில் எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெய்களான கரோவோவன், ஏபியால், தில்-ஏபியால், ஆரியவையும், பிளோவோனாய்டுகள், கௌமெரின்கள், ஸான்தோன்கள் மற்றும் டிரைடெர்பின்களும் காணப்படுகின்றன.

ஆயுர்வேத மருந்து

இந்தியாவின் ஆயுர்வேதத்தில் 'ஸடபுஷ்பா' என்று அழைக்கப்பட்டு காய்ச்சல், வயிற்றுவலி, குடல்புண் போன்றவற்றினை குணப்படுத்த மருந்தாக பயன்படுத்தப்பட்டது.

பண்டைய காலத்தில் கிரேக்கர்களும், எகிப்தியர்களும் இத்தாவரத்தின் பயன்களை அறிந்திருந்தனர். கிரேக்கர்கள் தங்களின் கண்கள் மீது இதன் இலைகளை வைத்து தூக்க மருந்தாக பயன்படுத்தினர். எகிப்தியர்கள் வலி குறைக்கும் மருந்துகளில் இதனை பயன்படுத்தினர்.

குழந்தைகளுக்கு மருந்து

இலைகள்,கனிகள் மற்றும் விதைகள் மருத்துவப் பயன் கொண்டவை. கனி - விதைகளில் காணப்படும் ஆவியாகக்கூடிய எண்ணெய் குழந்தைகளின் வயிற்றுவலி, உப்புசம் நீக்க உதவுகிறது. குழந்தைகளுக்கான கிரைப் வாட்டர் தயாரித்தலில் பயன்படுகிறது. ஜீரணம், சிறுநீர்போக்கு தூண்டுவியாக பயன்படுகிறது.

தாய்ப் பால் சுரத்தலை அதிகரிக்கும்

குழந்தை பெற்ற தாய்மார்களின் ரத்தப்போக்கை ஒழுங்குபடுத்துகிறது. தாய்ப் பால் சுரத்தலை அதிகரிக்கிறது. இதன் இலைகள் இளஞ்சூடான எண்ணெயில் தோய்த்தெடுக்கப்பட்டு தோல்மீது ஏற்படும் கட்டிகளை இளகச் செய்வதற்கு பயன்படுகிறது

Story first published: Thursday, September 8, 2011, 12:12 [IST]
Desktop Bottom Promotion