ராமதாஸ் பற்றிய கேள்விக்கு கும்பிடு போட்டு கிளம்பிய எடப்பாடி பழனிசாமி.. அடுத்து என்ன நடக்கப்போகுது?

By Vignesh Selvaraj

சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, பாமக - அதிமுக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி - அன்புமணி இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ராமதாஸ் பற்றிய கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்காமல் சென்றுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் முன்னணி அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய மூன்று கட்சிகளும் தங்கள் கூட்டணியை பலப்படுத்த தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றன. மற்ற கட்சிகளின் தலைவர்களும் கூட்டணி பேச்சுகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.


EPS Walks Away from Ramadoss Question After Talks What s Next for PMK

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு இன்று வருகை தந்தார். பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வந்த நிலையில், கூட்டணி குறித்து எந்த முடிவையும் அக்கட்சி வெளியிடாமல் இருந்தது.

கடந்த மாதம் பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஸ் கோயல் தமிழகத்திற்கு வருகை தந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு வந்திருந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியை சந்திக்கா விட்டாலும், எஸ்பி வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சரி செய்து, கூட்டணியில் இணைக்குமாறு அமித் ஷா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாமக மற்றும் தேமுதிக ஆகிய 2 கட்சிகளும் அதிமுக - பாஜக கூட்டணியில் தான் இடம் பெற்றிருந்தன. பாமக கட்சியில் உட்கட்சி பூசல் நிலவும் சூழலில், தேர்தலுக்குள் தந்தையும் மகனும் இணைவார்களா என்ற சந்தேகம் எழுந்தது. அப்படி இணையாவிட்டால் அதிமுக யாருடன் பேச்சுவார்த்தை நடத்தும்? கூட்டணி விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பதும் பெரும் கேள்விக்குறியாக இருந்தது.

இந்நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாமக தலைவர் அன்புமணி சந்தித்தார். இதையடுத்து இருவரும் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து பாமக போட்டியிடும். தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்துவிட்டோம், பின்னர் அறிவிப்போம்" எனத் தெரிவித்தார்.

"ராமதாஸ் உடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா?" என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் உடனடியாக வணக்கம் போட்டுவிட்டு சென்றார் எடப்பாடி பழனிசாமி. அன்புமணியும் எந்த பதிலும் அளிக்காமல் சென்றுவிட்டார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

யார் கண்ணு பட்டுச்சோ.. நல்லா இருந்த கூட்டணி இப்படி ஆயிருச்சே! திமுக கூட்டணியில் எழுந்த புகைச்சல்!

ராமதாஸ் தரப்பு தாங்கள் தான் பாமக எனக் கூறி வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமி, அன்புமணியை அழைத்து கூட்டணியை உறுதி செய்துள்ளது ராமதாஸ் தரப்பினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதையடுத்து, ராமதாஸ் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. அவரும் அதிமுக கூட்டணியில் இணைவாரா? அல்லது அவமதித்ததாக கருதி, திமுக அல்லது தவெக கூட்டணிக்குச் செல்வாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Credit: Oneindia

Desktop Bottom Promotion