இந்தியாவில் முதலில் திறக்கப்பட்ட ரயில் நிலையம் எது தெரியுமா? இது இன்னும் செயல்பாட்டில்தான் இருக்காம்...!

தற்போதைய புது இந்தியாவை வடிவமைத்த பல விஷயங்களில் இந்தியாவின் ரயில்வே மிகவும் முக்கியமானதாகும். இந்தியாவில் தற்போது கிட்டதட்ட 13000 ரயில்கள் இயக்கப்படுகின்றன மற்றும் 7,300 ரயில்வே நிலையங்கள் உள்ளன. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்த ரயில்களில் பயணிக்கின்றனர். இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் இந்திய ரயில்வேயின் பங்கு தவிர்க்க முடியாததாகும்.

இந்தியாவில் தற்போது 7,300 ரயில் நிலையங்கள் இருந்தாலும் இந்தியாவின் முதல் ரயில் நிலையம் எந்த ஊரில் நிறுவப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவின் முதல் ரயில் நிலையம் மும்பையின் கிழக்கு கடற்கரையில் நிறுவப்பட்டது. இந்த நிலையம் இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும். இங்கிருந்து, இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் 1853 ஏப்ரல் 16 அன்று தானே வரை ஓடியது.

Which Was the First Railway Station in IndiaA

இந்தியாவின் முதல் ரயில் நிலையம்

இந்தியாவின் முதல் ரயில் நிலையம் போரி பந்தர். இது ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் ரயில்வேயை விரிவுபடுத்துவதில் முக்கிய நிறுவனமாக இருந்த Great Indian Peninsular Railway (GIPR) ஆல் கட்டப்பட்டது. போரி பந்தர் என்ற பெயர் மராத்தி வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது. போரி என்றால் சாக்குப்பை, பந்தர் என்றால் துறைமுகம். இந்த பகுதி முதலில் இறக்குமதி-ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள், குறிப்பாக சாக்குகளில் அடைக்கப்பட்டு வரும் பருத்தி அல்லது தானியங்கள் போன்றவை சேமிக்கப்படும் ஒரு கிடங்காகப் பயன்படுத்தப்பட்டதால் இந்த பெயர் சூட்டப்பட்டது.

தற்காலிக ரயில் நிலையம்

1850-களில், கிரேட் இந்தியன் பெனின்சுலர் ரயில்வே இந்த பகுதியில் தனது ரயில் முனையத்தைக் கட்டியது. இந்த நிலையம் எளிமையான வடிவமைப்பைக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில், இது ஒரு தற்காலிக அமைப்பாக மட்டுமே கருதப்பட்டது, சுமார் 300 அடி நீளமுள்ள ஒரு மேடையுடன், பாய்களால் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையம் முதன்மையாக ரயில்வேயின் நிர்வாக அலுவலகங்கள் மற்றும் பயணிகள் சேவைகளை வழங்குவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது.

Which Was the First Railway Station in India

21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தொடக்கம்

இந்தியாவின் முதல் நிலையத்தின் திறப்பு விழாவிற்கு முன்பு, 18 நவம்பர் 1852 அன்று முதல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையம் 1853 ஏப்ரல் 16 அன்று ஆங்கிலேயர்களால் முறையாகத் திறக்கப்பட்டது. அன்றைய தினம் பம்பாயில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. தொடக்க விழா 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போதைய பம்பாய் ஆளுநரின் மனைவி லேடி பால்க்லேண்ட் ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

முதலில் இயக்கப்பட்ட ரயில் எது?

இந்த ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட முதல் பயணிகள் ரயில் 400 பயணிகளை ஏற்றிச் செல்லும் 14 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரயில் ஆகும். இது இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் மட்டுமல்ல, ஆசியாவின் முதல் வணிக ரயில் சேவையும் ஆகும். இது பிரிட்டிஷ் காலனித்துவ பொருளாதாரத்தை உயர்த்தியது, இந்தியாவின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தியது.

சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ்

1888 ஆம் ஆண்டில், போரி பந்தர் ரயில் நிலையம் இடிக்கப்பட்டு, விக்டோரியா டெர்மினஸ் (VT) என்று அழைக்கப்படும் ஒரு பிரமாண்டமான புதிய கட்டிடம் கட்டப்பட்டது. 1996 ஆம் ஆண்டில், இது சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இன்று இது மும்பையின் முக்கிய ரயில் நிலையமாகும், தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்த ரயில் நிலையம் மூலம் பயணிக்கின்றனர். 2004 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ இதை உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது.

Story first published: Saturday, September 13, 2025, 11:48 [IST]
Desktop Bottom Promotion