22 போர்களில் முகலாயர்களை வீழ்த்தி டெல்லி அரியணையைக் கைப்பற்றிய ஒரே இந்து அரசர் யார் தெரியுமா?

இந்திய அரசியல் என்பது இப்போது மட்டுமல்ல கடந்த காலத்திலிருந்தே டெல்லியை மையமாக வைத்தே இயங்கி வந்தது. முகலாயர்களின் வருகைக்கு முன் டெல்லி பல்வேறு ஆட்சியாளர்களின் கீழ் இருந்து வந்தது. ஆனால் முகலாயர்களின் வருகைக்குப் பின் டெல்லி அவர்களின் கோட்டையாக மாறியது. பாபர் மற்றும் ஹுமாயூனில் தொடங்கி ஷாஜகான் மற்றும் ஒளரங்கசீப் வரை, டெல்லியின் வரலாறு முகலாய ஆட்சியாளர்களின் ஆட்சியைக் கண்டுள்ளது.

இருப்பினும், ஒரு இந்து மன்னர் முகலாயர்களையே தோற்கடித்து டெல்லி அரியணையைக் கைப்பற்றினார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஹேமு என்றும் அழைக்கப்படும் ஹேமச்சந்திர விக்ரமாதித்யன், 16 ஆம் நூற்றாண்டில் டெல்லி அரியணையில் அமர்ந்த கடைசி இந்து ஆட்சியாளர் ஆவார். ஹேமு இந்தியாவின் நெப்போலியன் என்றும் வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறார்.

Which Hindu King Defeated Mughals and Ruled Delhi

ஹேமச்சந்திர விக்ரமாதித்யாவின் எழுச்சி

1501 ஆம் ஆண்டில் ரேவாரியில் ஒரு வணிகரின் மகனாகப் பிறந்த ஹேமுச்சந்திர விக்ரமாதித்யா, ஆப்கானிய ஆட்சியாளர்களின் கீழ் எடை மற்றும் அளவீடுகளின் கண்காணிப்பாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் ராஜஸ்தானின் அல்வார் பகுதியில் உள்ள ராஜ்கருக்கு மூன்று மைல் தொலைவில் உள்ள மச்சேரி கிராமத்தில், ஒரு தூசர் பிராமண குடும்பத்தில் பிறந்ததாக சில வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் ஒரு பனியா குடும்பத்தில் பிறந்ததாகவும் சில குறிப்புகள் கூறுகிறது.

போர்க்கலையில் தேர்ச்சி

ஹேமு ஒரு சிறந்த போர்வீரராக மட்டுமல்லாமல், சிறந்த நிர்வாகியாகவும் இருந்தார். அவரது இராணுவத் திறமையை அவர்களின் நண்பர்களின் மட்டுமல்ல எதிரிகள் கூட புகழ்ந்தனர். பிரபல வரலாற்றாசிரியர் ஆர்.சி. மஜும்தார், ஷேர் ஷாவைப் பற்றிய ஒரு நூலில் 'Hemu: A Forgotten Hero' என்ற அத்தியாயத்தில், பானிபட் போரில் நடந்த ஒரு துரதிர்ஷ்டமான நிகழ்வே ஹேமுவின் வெற்றியைத் தோல்வியாக மாற்றியது என்று குறிப்பிடுகிறார். இல்லையெனில், அவர் முகலாயர்களுக்குப் பதிலாக டெல்லியில் ஒரு இந்து சாம்ராஜ்ஜியத்தை நிறுவியிருக்கலாம்.

Which Hindu King Defeated Mughals and Ruled Delhi

ஆதில் ஷா அவருக்கு பிரதமர் பதவி வழங்கினார்

ஆதில் ஷாவின் ஆட்சியின் போது, ​​ஹேமுவுக்குப் பிரதம மந்திரி பதவிக்கு இணையான 'வக்கீல்-இ-ஆலா' என்ற பட்டம் வழங்கப்பட்டது. ஹுமாயூன் டெல்லி அரியணையை மீண்டும் கைப்பற்றிவிட்டார் என்பதை அறிந்த ஆதில் ஷா, முகலாயர்களை முழுமையாக விரட்டும் பணியை ஹேமுவிடம் ஒப்படைத்தார். இந்த போர்களில் ஹேமு தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.

அதுமட்டுமின்றி, ஹேமு ஆதில் ஷாவிற்காக 22 போர்களில் தொடர் வெற்றிகளைக் குவித்தார். அவர் உயிருடன் இருந்தவரை, யாராலும் அவரைத் தோற்கடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால்தான் அவர் பெரும்பாலும் இந்தியாவின் நெப்போலியன் என்று அழைக்கப்படுகிறார்.

ஹேமு அக்பரைத் தோற்கடித்தார்

1556 ஆம் ஆண்டில், ஹுமாயூனின் மரணத்திற்குப் பிறகு, அக்பர் பொறுப்பேற்று டெல்லியின் ஆட்சியாளரானார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட ஹேமு, முகலாயப் படையின் மீது தாக்குதல் தொடுத்தார். இதுவே முதல் பானிபட் போர் ஆகும், இதில் ஹேமு அக்பரைத் தோற்கடித்தார். அக்பர் மீதான தனது வெற்றியை நிரூபிக்க, ஹேமு டெல்லியைக் கைப்பற்றி தன்னை ஆட்சியாளராக அறிவித்துக்கொண்டார். இருப்பினும், ஒரு மாதம் கழித்து, ஹேமுவுக்கும் அக்பருக்கும் இடையே மற்றொரு போர் நடந்தது. அந்த போர்க்களத்திற்கு ஹேமு எந்தவிதமான கவசமும் அணியாமல் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஹேமுவின் வீழ்ச்சி

வரலாற்றிசிரியர் பதாயுனி தனது 'முந்தகாப்-உத்-தவாரிக்' என்ற நூலில், ஹேமுவின் தாக்குதல்கள் மிகவும் துல்லியமாக இருந்ததால், அவை அக்பரின் படைகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தின என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அலி குலி ஷைபானியின் வீரர்கள் ஹேமுவின் படைகள் மீது அம்பு மழையைப் பொழிந்தபோது, ​​முகலாயப் படைகள் ஒரு நம்ப முடியாத திருப்புமுனையை சந்தித்தது.

அந்த அம்புகளில் ஒன்று ஹேமுவின் கண்ணில் பாய்ந்து, அவரது மண்டையோட்டில் குத்தி நின்றது. அம்பு பாய்ந்த போதும் அவர் தொடர்ந்து போரிட்டார், ஆனால் இறுதியில் சுயநினைவிழந்து கீழே விழுந்தார். பின்னர் முகலாயப் படை அவரைச் சிறைபிடித்தது, அக்பரின் தளபதியான பைராம் கான், ஹேமுவின் தலையைத் துண்டிக்க உத்தரவிட்டார். ஒருவேளை இந்த போரில் ஹேமு வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவின் வரலாறு வேறு மாதிரி இருந்திருக்கும்.

Story first published: Friday, December 19, 2025, 12:55 [IST]
Desktop Bottom Promotion