திருப்பதியில் வாகனங்களுக்கு தடை.. ஏன் தெரியுமா?

உலகளவில் பணக்கார கோவில்களில் திருமலை திருப்பதி ஆலயமும் ஒன்று. ஸ்ரீஹரி விஷ்ணுவின் வடிவங்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் இந்த ஆலயத்தில் வணங்கப்படுகிறார்.

அந்த விஷ்ணுவே இங்கு வெங்கடேஸ்வரர் வடிவில் வசிப்பதாக மக்களால் நம்பப்படுகிறது. தற்போது புனிதமான மாதமான புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளது.. அதனால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது..

tirupati-devasthanam-announced-vehicles-banned-in-thirumalai-for-3-days-due-to-brahmotsavam-festival

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் அக்டோபர் 4ம் தேதி தொடங்கி அக்டோபர் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில் திருப்பதி ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாளிக்கவுள்ளார். இந்த பிரம்மோற்சவ விழாவின் முக்கிய கொண்டாட்டமான கருட சேவை அக்டோபர் 8ம் தேதி நடைபெறுகிறது.

இதனால் திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்பதால் கருட சேவைக்கு முன்பும் பின்பும் அதாவது அக்டோபர் 7ம் தேதி இரவு 9 மணி முதல் 9ம் தேதி காலை 6 மணி வரை 2 மலைப்பாதைகளிலும் பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கருட சேவைக்கான அனைத்து துறைகளின் ஏற்பாடு குறித்து திருமலை - திருப்பதி தேவஸ்தானம் தீவிர ஆலோசனை நடத்தியது. ஆலோசனையின் முடிவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதில், பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்காக பிரத்யேக வாசல்கள் அமைத்தல், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்து தருதல் என பலமுடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.. மேலும் திருப்பதி ஏழுமலையானை புரட்டாசி மாதத்தில் இலவச தரிசனம் செய்ய விரும்புவோர் திருப்பதி ரயில் நிலையம் எதிரில் உள்ள அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாஸ் ஆகிய இடங்களில் தினமும் அதிகாலை 2 மணி முதல் டோக்கன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கன் பெற்ற அதே தினத்தில் அல்லது அடுத்த நாளில் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்ய முடியும். சந்திரகிரியில் இருந்து ஸ்ரீவாரி மெட்டு வழியாக படியேறி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் காலை 6 மணிக்கு 3,000 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி நேற்று முன்தினம் இரவு கருட சேவை நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற இந்த சேவையில் 78,690 பேர் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.. இதனால் அடுத்தமாதம் நடைபெற உள்ள கருட சேவையில் இதைவிட அதிகமான பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது..

Story first published: Friday, September 20, 2024, 22:23 [IST]
Desktop Bottom Promotion