Thoppi Amma: திருவண்ணாமலையில் நடமாடும் பெண் சித்தர் என்று அழைக்கப்படும் தொப்பி அம்மா.. உண்மையில் யார் இவர்?

Thoppi Amma: மனிதன் உயிர் வாழ நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து சக்திகளும் மிகவும் அவசியம். இந்த 5 சக்திகள் தான் பஞ்சபூதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஒன்று இல்லாவிட்டாலும் மனிதனால் வாழ முடியாது. மேலும் இந்த 5 சக்திகளாலும் ஆக்கவோ, அழிக்கவோ, காக்கவோ முடியும். இந்த பஞ்சபூதங்களின் அதிபதினாக கருதப்படுபவர் தான் சிவபெருமான். இந்த சிவபெருமானின் ஐந்து கோவில்கள் பஞ்சபூத சிவதலங்களாக விளங்குகின்றன. அதில் நெருப்பு தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது.

இந்த திருவண்ணாமலையில் உள்ள மலை காண்பதற்கு சிவலிங்கம் போன்று காட்சியளிப்பதாகவும், இந்த மலையில் 108 சிவலிங்கங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த திருவண்ணாமலையை ஒருமுறை சுற்றி வந்தால் 108 சிவலிங்கங்களை சுற்றி வழிபட்டதற்கு சமம் என்றும் கூறப்படுகிறது. திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அண்ணாமலையாரை தரிசனம் செய்யவும், கிரிவலத்தை மேற்கொள்ளவும் ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

Thoppi Amma Who Is Thoppi Amma In Tiruvannamalai In Tamil

நினைத்தாலே முக்தி தரும் தலமான திருவண்ணாமலைக்கு சென்றால், இங்கு ஏராளமான சித்தர்களும், சாமியார்களும் வலம் வருவதைக் காணலாம். மேலும் இந்த மலையை வலம் வரும் சிலரை பார்க்க சாதாரணமாக காணப்பட்டாலும், அவர்களின் செயல்பாடுகள் சற்று வித்தியாசமாக இருப்பதைக் காணலாம். இப்படிப்பட்டவர்களை பலர் சித்தர்களாக இருக்கக்கூடும் என்று கூறுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு பெண் சித்தர் தான் தொப்பி அம்மா. இவரை காண இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, வெளிநாட்டில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர் என்பது தெரியுமா?

தொப்பி அம்மா

திருவண்ணாமலையில் உள்ள மலையை 365 நாட்களும் வலம் வருபவர் தான் தொப்பி அம்மா. இவர் ஒரு நாளைக்கு 3 முறை கிரிவலம் வருகிறார். திருவண்ணாமலையில் சுமார் 18 ஆண்டுகளாக இவர் வசித்து வருகிறார். இந்த தொப்பி யாரிடமும் பேசமாட்டாராம். அதேப் போல் யாரிடமும் யாசகமும் கேட்கமாட்டாராம்.

அதே வேளையில் பக்தர்கள் தாங்களாக விரும்பி கொடுப்பதை வாங்கிக் கொள்வாராம். அதுவும் இவர் யாரிடமும் பணம் வாங்கமாட்டாராம். அப்படியே வாங்கினாலும் 10 ரூபாய்க்கு மேல் வாங்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது. முக்கியமாக அனைவரிடமும் இவர் வாங்கமாட்டார். குறிப்பிட்ட சிலர் கொடுப்பதை மட்டுமே வாங்குவாராம்.

தொப்பி அம்மா கிரிவலம் வரும் போது குறிப்பிட்ட கடைகளின் முன் நிற்கும் போது, அந்த கடைக்காரர் தரும் உணவுப் பொருட்களை ஏற்றுக் கொள்வாராம். இவர் எந்த கடையின் முன் நிற்கிறாரோ, அவர் சென்ற பின் அந்த கடையில் வியாபாரம் அமோகமாக செல்வதாக அங்குள்ளோர் கூறுகின்றனர்.

தொப்பி அம்மா பார்ப்பதற்கு வித்தியாசமான தோற்றத்துடன் தொப்பியை அணிந்தவாறு கிரிவலம் வருவதால், இவரை தொப்பி அம்மா என்று மக்கள் அழைக்கத் தொடங்கியுள்ளனர். முக்கியமாக இந்த தொப்பி அம்மா அனைவருக்குமே ஆசியை வழங்கிவிடமாட்டார். நல்லவர்களுக்கு மற்றும் நல்ல எண்ணம் கொண்டவர்களுக்கு மட்டுமே ஆசியை வழங்குவாராம். கெட்ட எண்ணம் கொண்டவர்களுக்கு ஆசியை வழங்கமாட்டாராம் மற்றும் அவர்கள் ஏதாவது கொடுத்தால், தனது துணியால் முகத்தை மூடிக் கொள்வாராம்.

இந்த தொப்பி அம்மாவின் மகிமையை அறிந்து, இவரைக் காண பக்தர்கள் பலரும் திருவண்ணாமலைக்கு வருவதோடு, அவர் சாப்பிட்டு தூக்கிப் போட்ட மிச்சத்தை பிரசாதமாக பக்தர்கள் சாப்பிடுகிறார்கள். இவரை தரிசனம் செய்தாலோ வாழ்வில் பல நன்மைகள் நடப்பதாகவும் பலர் கூறுகின்றனர்.

உண்மையில் தொப்பி அம்மா யார்?

திருவண்ணாமலையில் நடமாடும் பெண் சித்தராக அழைக்கப்படும் தொப்பி அம்மாவின் உண்மையான பெயர் பழனியம்மாள். இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜெகசமுத்திரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர். 18 ஆண்டுகளுக்கு முன் இவர் பெங்களூருவில் வசித்து வந்தார். அங்கு தனது சகோதரர் திடீரென்று மரணம் அடைந்ததால், அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனமுடைந்து யாரிடமும் எதுவும் சொல்லாமல் திருவண்ணாமலைக்கு வந்து தஞ்சமடைந்து, கிரிவலம் மேற்கொள்ள தொடங்கியுள்ளார். 18 ஆண்டுகளுக்கு பின், இவரது குடும்பத்தினர் இவரைப் பற்றி சமூக வலைதளத்தில் வெளிவந்த வீடியோவின் மூலம் அறிந்து கொண்டதாக பழனியம்மாளின் மகள் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, March 27, 2024, 10:45 [IST]
Desktop Bottom Promotion